கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 3

This entry is part 3 of 4 in the series கங்கை உருவாகிறாள்

அலக்நந்தா – மந்தாகினி நதிகளின் சங்கமம் மற்றும் ருத்ரநாத் ஜி மந்திர் அனுபவங்கள் மனதில் மகிழ்ச்சியினை உண்டாகியிருக்க, குறுகிய சந்தின் வழி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன்.  ஒரு ஓரத்தில் சிறு கடை ஒன்று இருக்க, அங்கே இருந்த பலகை ஒன்றில் அமர்ந்து கொண்டு, கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  தேநீர், காஃபி போன்றவை அருந்துவதை தவிர்த்து விட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி போன்றவை மட்டுமே அருந்துவதால் அப்படி எதுவும் கிடைக்குமா என்று பார்க்க ஷிக்கஞ்சி கிடைத்தது! ஷிக்கஞ்சி என்பது எலுமிச்சை சாறு, ஷிக்கஞ்சி மசாலா பவுடர், தண்ணீர் (அல்லது) சோடா கலந்து செய்யப்படுவது! எலுமிச்சை ஜூஸுக்கு அக்கா என்று வைத்துக் கொள்ளலாம் 🙂  அதை வாங்கி பருகியபடி கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  ருத்ர ப்ரயாக் அருகே இருக்கும் கார்த்திக் சுவாமி கோவில் செல்ல எனக்கு யோசனை இருந்ததால் அவரிடம் கேட்க அவர் சொன்ன தகவல் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.