ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -1

இவை திருவண்ணாமலையில் பாடப்பெற்றவை. தன்னுள்ளே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியைக் கண்டு கொண்ட மாணிக்க வாசகர், அப்படிக் கண்டு கொள்ளாமல் மாயையில் மூழ்கி அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து, தூங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்புகிறார். மார்கழி மாதத்தில் பராசக்தியை நோக்கி வழிபாடுகள் செய்து நல்ல கணவனுக்காகவும்,நாட்டில் மழை பொழிந்து வளம் சிறக்கவும் பெண்கள் பிரார்த்தனைகள் செய்வார்கள். ஆகவே அந்தப்பாவை நோன்பின் போது ஒரு பெண் மற்றவளைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்த பாடல்களே இவை எல்லாமே. அனைத்துப்பாடல்களும் நாடு வளம் பெறவும், நாட்டு மக்கள் மனம் வளம் பெறவுமே பாடப்பெற்றதாகும்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!”

வாள் தடங்கண் மாதே,= வாளைப் போல் ஒளி வீசும் அழகிய அகன்ற கண்களை உடைய பெண்ணே,

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வளருதியோ= அடியும் முடியும் காணமுடியாத பெரும் சோதி வடிவான ஈசனைக் குறித்துப் போற்றி நாங்கள் பாடிய பாடல்களைக் கேட்டும் இன்னமும் தூங்குகிறாயா?? என்ன அழகான சொல் வளருதியோ? வளருதியோ என்றால் தூங்குவது! இப்போ இத்தகைய சொற்பிரயோகங்களையே காணமுடிவதில்லை.

வன்செவியோ நின்செவிதான்= உன்னுடைய காது என்ன செவிட்டுக் காதா? உனக்குக் கேட்கவே இல்லையே?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்கேட்டலுமே= அந்த மஹாதேவனின் சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் வாழ்த்திப் பாடிய வாழ்த்தொலியைக் கேட்டதுமே அந்த மற்றொருத்தி என்ன செய்தாள் தெரியுமா?? அவள் மனம் ஈசனின் நினைவால் நெக்குருகியது. பக்தி மிகுதியால் கண்கள் கண்ணீரைப் பெருக்கியது.

விம்மி விம்மி மெய்ம்மறந்து= விம்மி விம்மி தன்னை மறந்து ஈசன் திருவடி ஒன்றையே நினைத்த வண்ணம் இருந்தாள்.

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்= போதார் அமளி இங்கே படுக்கையைக் குறிக்கும். படுக்கையிலிருந்து புரண்டு எழுந்து, நின்று, கிடந்து என என்ன செய்வது எனப் புரியாமல் அவன் திருவடி ஒன்றையே நினைத்து நினைத்து மனம் உருகிக்கொண்டிருக்கிறாள். நீயானால் நாங்கள் இவ்வளவு எழுப்பியும் இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே?

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.