ஆவணி மாத ராசி பலன்கள் (16.08.2020 முதல் 16.09.2020 வரை)

ஜெய் ஸ்ரீமன் நாராயணா! (சிம்ம மாத) ஆவணி மாத ராசி பலன்கள் (16.08.2020 முதல் 16.09.2020 வரை) கிரஹ நிலைகள் 16.08.2020 அன்று. சூரியன் சிம்ம ராசிக்கு 16.08.2020 மாலை 6.42 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

ஆவணி மாத ராசி பலன்கள்
ஆவணி மாத ராசி பலன்கள்

ஆவணி மாத ராசி பலன்கள்

கிரஹபாத சாரங்கள் ஆவணி 1ம் தேதி அன்று :

லக்னம்  – கும்பம் – அவிட்டம்  4

சூரியன் – சிம்மம் – மகம் 1

சந்திரன் – மிதுனம் – புனர்பூசம் 2

செவ்வாய் – அஸ்வினி -1

புதன் – ஆயில்யம் 4

குரு (வக்ரம்) – தனூர் – பூராடம் 4

சுக்ரன் – மிதுனம் – திருவாதிரை 3

சனி (வக்ரம்) – மகரம் – உத்திராடம் 2

ராகு – மிதுனம் – மிருகசீரிடம் 3

கேது – தனூர் – மூலம் 1

ஆவணி மாத ராசி பலன்கள்

மேஷ ராசி (அஸ்வினி, பரணி , க்ருத்திகை 1ம்பாதம் முடிய) :

ராசி நாதன் செவ்வாய் ராசியில் இருந்தாலும் 10ம் தேதியி வக்ரம் ஆகிறார். சூரியன் 5ல் ப்ரவேசிக்கிறார், இது கொஞ்சம் பலவீனம், பெரியோர்கள், மேலதிகாரிகள், அரசாங்கம் என்று மனஸ்தாபம், கோபத்துக்கு ஆளாக நேரும், முதல் பத்து நாளைக்கு செவ்வாய் 12ம் இடத்துக்கான விரய பலனை தருவார் அதாவது பலவித வீன் விரயம், மன குழப்பம், அந்நியர்களால் தொந்தரவு, வழக்கில் சிக்குதல் போன்றவை, 10க்கு மேல் வக்ரியாவதால் கொஞ்சம்பலம் கூடும் இருந்தாலும் கவனமாக இருப்பது அவசியம், சந்திரன் சில குழப்பங்களை ஏற்படுத்துவார், புதன் செப்டம்பர் 2ம் தேதிக்கு மேல் தான் பொருளாதார மேம்பாடு, செயல்களில் வெற்றி, குடும்பத்தில் சுபிக்ஷம் என்று தருவார். குரு 9ல் வக்ரியாக இருக்கிறார் கேதுவுடன் இணைந்து இருப்பதால் பெரிய நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது, பெரிய கெடுதல் இருக்காது எனினும் மனைவி மக்களின் முன்னேற்றம் தடைபடு, சுக்ரன் ஓரளவுக்கு சந்தோஷத்தை தருகிறார் உடல் ஆரோக்கியம் மேம்படும், செப்டம்பர் 1முதல், கடகத்தில் மாறி வெற்றிபல தருகிறார், கேளிக்கைகள் இருக்கும் ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். சனிபகவான் 10ல் வக்ரி பெரிய நன்மைகள் வராது உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்குமே தவிர முன்னேற்றம் இருக்காது. என்ன செஞ்சாலும் இழுபறியாக இருக்கும். தாமதமாக எல்லாம் நடக்கும். ராகு 3ல் இருந்தாலும் 2ம் இடத்துக்கான பலனை தருவார். பெரிய நன்மையில்லை யாரோடும் வீன் விவாதம் செய்யாமல் இருந்தால் நல்லது. பொதுவில் இந்த மாதம் சுக்ரனும் புதனும் மட்டுமே நல்ல பலன்களை தருவதால் அனைத்து பிரிவினரும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது, வீன் விவாதங்களை தவிர்ப்பது, சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : அஸ்வினி – ஆகஸ்ட் 26, பரணி – ஆகஸ்ட் 27, கிருத்திகை 1 – ஆகஸ்ட் 28

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : முருகன் அல்லது உங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நல்லது. சஷ்டி கவசம் போன்று படிப்பது கேட்பது மன ஆறுதலை தரும். முடிந்த அளவு அன்னதானம், வஸ்திர தானம் போன்றவற்றை செய்யுங்கள், உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு வீட்டில் விளக்கேற்றி ஸ்லோகங்களை சொல்லுங்கள்.

ரிஷப ராசி (க்ருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதம் முடிய) :

ராசிநாதன் சுக்ரன் 2லும் 3லுமாக சஞ்சரிக்கிறார் இது நன்மை தரும், லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும், விரும்பிய இடமாற்றம் உண்டாகும், பண வரவு தாராளமாக இருக்கும், சூரியன் 4ல் கொஞ்சம் உஷ்ண சம்பத்தப்பட்ட தொந்தரவுகள் இருக்கும் தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும், அதே நேரம் சூரியன் ஆட்சி அதனால் அரசாங்கத்தில் உதவி கிடைக்கும். தொழில் உத்தியோகம் நல்ல நிலையில் இருக்கும். சந்திரன் நிறைய நன்மைகளை செய்கிறார் மகிழ்ச்சி பெருகும்,  உறவினர் உதவி கிடைக்கும், செவ்வாய் முதல் 10 நாள் பதவி, பணம், செல்வாக்கு என்று தருவார் அதன் பின் வக்ரியாகி 12ல் இருப்பதால்  சுப விரயங்கள் உண்டாகும், செவ்வாயின் 4, 8 பார்வைகள் பூமி லாபம், வருமானம் தருவார் ரியல் எஸ்டேட், வாகனம் சம்பத்தப்பட்ட தொழி, விவசாயம், ஓட்டல், சமையல் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதனும் 4,5ல் சஞ்சரித்து வாகன யோகம், பொருள் வரவு, பாராட்டு என்று கொடுப்பார் அதேநேரம் அயலூர் பயணத்தினால் அலுப்பையும், வீண் வழக்கும் கொடுப்பார். கவனம் தேவை, குரு , சனி ,ராகு/கேது சஞ்சாரங்கள் கடுமையான கஷ்டங்களை கொடுக்கும், எதிலும் ஒரு எச்சரிக்கை கவனம் தேவை, நிதானம் பொறுமை நல்ல நிலையை கொடுக்கும். நண்பர்களால் கெட்டபெயர் உண்டாகும், நீங்கள் நல்லவர் என நினைத்து நாடும் நண்பர்/உறவினர் உங்களுக்கு எதிராக சதிசெய்வார். சொந்த தொழில் செய்வோர் கவனமாக இருத்தல் வேண்டும், அதேபோல அரசு துறை / தனியார் துறை ஊழியர்கள் தங்கள் ரகசியங்கள் அல்லது அலுவலகத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி நெருங்கிய ஊழியர்களிடம் கூட பகிரவேண்டாம். மற்ற வீட்டில் இருக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தாரோடு சுமூகமாக போவது நல்லது. பொதுவில் பல கிரஹங்கள் நன்மைகளை நிறைய செய்தாலும் 8ல் இருக்கும் குரு கேது மேலும் ராசியை ஆதிக்கம் செய்யும் ராகு கடுமையான சோதனைகளை செய்வதால் கொஞ்சம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

சந்திராஷ்டமம்: கிருத்திகை 2,3,4 – ஆகஸ்ட் 28, ரோஹிணி – ஆகஸ்ட் 29, மிருகசீரிடம் 1,2 – ஆகஸ்ட் 30

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : சிவனை வணங்கவேண்டும். வாயார ஓம் நமசிவாய என்று சொல்லி கொண்டிருங்கள், ப்ரதோஷ நாளில் நந்தி அபிஷேகம் பாருங்கள், சிவனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள், அன்னதானம், கல்வி தானம் போன்றவற்றை செய்யுங்கள்.

மிதுன ராசி (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம் முடிய) :

ராசிநாதன் புதன் 1.9.20 வரை 3லும் பின் 4லுமாக இருக்கிறார். நல்ல வாக்கு திறன் உண்டாகும் சொல்வது நடக்கும், எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் முறியடித்துவிடுவீர்கள், இருந்தாலும் மாத பிற்பகுதியில் கொஞ்சம் மன சஞ்சலம் உண்டாகும். சூரியன் 3ல் அதிக நன்மையை செய்கிறார், ஆரோக்கியம் மேம்படும், பணவரவு உண்டாகும், உத்யோகம், தொழில் எல்லாம் நன்றாக இருக்கும், உயர்வு ஏற்படும். சந்திரனும் தன்பங்குக்கு சந்தோஷம் முன்னேற்றம் தருகிறார். செவ்வாய் 11ல் பூமி லாபத்தை தருகிறார், வக்ரியானாலும் நன்மை செய்கிறார், வீடு வாங்குவீர்கள் அல்லது நல்லவீட்டில் குடிபோவீர்கள், சுக்ரன் ராசியிலும் 2லுமாக சஞ்சரிக்கிறார், திருமணம், பெண்களால் ஆதாயம், பணவரவு, லக்ஷ்மீ கடாக்ஷம், குடும்ப நிலையில் ஏற்றம், நினைத்த காரியம் வெற்றி அடைதல் என்று இருக்கும். குரு வக்ரி அதனால் கெடுதல் செய்யாமல் இருக்கிறார். கேதுவுடன் இணைவது குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு இருக்கும் நீங்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கேதுவால் வாழ்க்கை துணைவர் உடல் நலம் பாதிக்க படும். வைத்திய செலவை கொடுக்கும். சனி அஷ்டமத்தில் வக்ரி விபத்து, வீண் விரயம், வழக்கு துயர சம்பவங்கள், ஜீவன வகையில் நஷ்டம் என்றெல்லாம் கொடுக்கும். ஜனன ஜாதகத்தில் சனி நல்ல இடத்தில் இருந்தால் இந்த பாதிப்புகள் இருக்காது. ராகு ராசியில் இருந்தாலும் 12ம் இடத்தின் பலனை கொடுப்பார், வழக்குகள் இழுத்து கொண்டு போகும் கடனை கட்ட கடன் வாங்க வேண்டியிருக்கும் அலைச்சல்கள் இருந்து கொண்டிருக்கும். கூடுமானவரையில் கடன் வாங்குவதை தவிர்ப்பதும் அடுத்தவரிடம் வாக்குவாதம் செய்யாமல் இருப்பதும் நன்மை தரும். பொதுவாக இந்த மாதம் சனி ராகு/கேது தவிர மற்ற கிரஹங்களால் நன்மை அதிகம் இருப்பதால் கவலை வேண்டாம். கூடுமானவரையில் சிக்கணமாக இருப்பது பொறுமை நிதானத்துடன் செயல்படுவது, சேமிக்கும் பழக்கத்தை கொள்வது என்பது ஒரு நல்ல நிலையை தரும்.

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் 3,4 – ஆகஸ்ட் 30, திருவாதிரை – ஆகஸ்ட் 31, புனர்பூசம் 1,2,3 –  செப்டம்பர் 1

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அனந்த சயனத்தில் இருக்கும் பெருமாளை வணங்குவது ரங்கநாதரை சேவிப்பது, சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்வது எள் விளக்கு ஏற்றுவது நன்மை தரும், ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள், ஆடை கொடுங்கள்

கடக ராசி (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) :

மாதம் ஆரம்பிக்கும் போது ராசிநாதன் சந்திரன் ராகு மற்றும் சுக்ரனுடன் இருக்கிறார் இது மன சஞ்சலம், பணவிரயம் என்று தரும், பொதுவாக அவர் வாழ்வில் ஏற்ற இறக்கங்களை இந்த மாதம் தருவார். பெரிய சந்தோஷம் என்று இருக்காது. 2ல் ஆட்சியாக சூரியன் நன்மை செய்தாலும் கண்ணில் பிரச்சனை வரலாம், கூடுமானவரை அடுத்தவரை நம்பி எந்த செயலையும் செய்யாதீர்கள் சூரியன் தீய பலனை தருவார். செவ்வாய் 10.09.20 வரை உடல் பலஹீனம், தொழில் பிரச்சனை முன்னேற்ற தடை என்று செய்தாலும் 10.09.20க்கு வக்ரியாக மாறுவதால் ஓரளவு கெடுதல் இல்லாமல் நிம்மதியாக போகும். 12, 3க்குடைய புதன் 2,3ல் சஞ்சரிக்கும் போது ஓரளவு நன்மை தருகிறார். பொருளாதாரம் மேம்படும், கம்யூனிகேஷன் ஸ்கில் வாகனசுகம் பெயர் புகழ் என்று தருகிறார், சிறு சிறு தடங்கலும் வரலாம் சுக்ரன் 12லும் ராசியிலுமாக சஞ்சரிக்கிறார் நல்ல சுகம், கணவன் மனைவி ஒற்றுமை, பொருளாதார மேம்பாடும், ஆடம்பர பொருளை விற்பவர்கள், சினிமா, மீடியா துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் புகழ் எல்லாம் உண்டாகும். குரு 6ல் வக்ரியாக கேதுவுடன் கஷ்டங்களை தருகிறார், துயர சம்பவம், கடன் வழக்கு, உறவினர் வகையில் துயரம், எதிரிகளின் கை ஓங்குதல், பலவித இடையூறுகளையும் செய்கிறார்கள், சனி 7ல் வக்ரியாக வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும், மர்மஸ்தானங்களில் நோய் ஏற்பட்டு அவஸ்தை கொடுக்கும், ராகு 12ல் இருந்தாலும் 11ன் பலனை கொடுக்கிறார். முயற்சியில் வெற்றி, உத்தியோகம் தொழில் இவற்றில் முன்னேற்றம், சுறுசுறுப்பு, மேல்மட்ட மனிதர்களின் ஆதரவு பொருளாதாரம் ஓரளவு நன்றாக இருக்கும். பொதுவில் சுக்ரன், புதன், ராகு மட்டுமே நன்மை செய்வதால் 40 – 60 என்ற அளவில் நன்மை தீமை இருக்கும். கொஞ்சம் கவனமாகவும் நிதானத்துடன் இருப்பது அவசியம். சேமிக்க பழகுங்கள். ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் மற்ற கிரஹங்களால் பெரிய கெடுதல் வராது.

சந்திராஷ்டமம் : புனர்பூசம் 4 – செப்டம்பர் 1, பூசம் – செப்டம்பர் 2, ஆயில்யம் – செப்டம்பர் 3

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : துர்கை, அய்யனார், காளி போன்ற எல்லை தெய்வங்கள், கருப்பு, சுடலை போன்ற தெய்வங்களை வழிபடுவது தேய்பிறை அஷ்டமியில் பைவரவர் வழிபாடு போன்றவை நன்மை தரும். முடிந்த அளவு தான தர்மங்களிய செய்யுங்கள். மாற்று திறனாளிகளுக்கு அவர்களுக்கு விருப்பமானதை செய்து கொடுங்கள்.

சிம்ம ராசி(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

ராசி நாதன் சூரியன் ஜென்ம ராசியில். இவர் ராசியில் சஞ்சரிப்பதை விட ராசிக்கு 3,6,10,11ல் சஞ்சரிப்பது நன்மை தரும். சூரியன் ராசியில் சஞ்சரித்து உஷ்ண சம்பத்த வியாதிகள் சொறி சிரங்கு, நோய் தருகிறார் பிரயாண களைப்பு இருக்கும், உறவினர்களால் மன கஷ்டம் உண்டு. சந்திரன் மாதம் முழுவதும் சந்தோஷத்தை தருகிறார். ஓரளவு முன்னேற்றம் இருக்கும். செவ்வாய் செப்டம்பர் 10 வரை தொடர்ந்து செய்யப்படும் பிராயாணத்தால் அலைச்சலும், சிறு காயம் போன்றும், முயற்சிகளில் தடையும் தருகிறார் அதன்பின் வக்ரியாகி ஓரளவு நன்மை செய்கிறார், சொத்து போன்றவை கிடைக்க செய்கிறார். புதன் செப்டம்பர் 2க்கு பின் நல்ல வாக்கு திறன், எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் முறியடிக்கும் நிலை, சபையில் முன்னிருத்தல் போன்றவற்றை செய்கிறார். குருபகவான் 5ல் வக்ரியாக சிலருக்கு புத்திரபாக்கியம், பிள்ளைகள் திருமண ஏற்பாடு, குழந்தைகளால் மகிழ்ச்சி புதியவீடு குடிபோகுதல், உடல் ஆரோக்கியம் மேம்படுதல் என்று இருந்தாலும் அதே 5ல் கேதுவும் இருப்பதால் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், அவர்களின் படிப்பில் தடை வரலாம். கவனம் தேவை, சுக்ரன் லாபத்திலும் 12ம் இடத்திலுமாக இந்த மாதம் சஞ்சாரிக்கிறார். மாத ஆரம்பம் சுக்ரன் முன்னேற்றத்தை தருகிறார். நாள்பட்ட வரவேண்டிய தொகைகள் கொடுத்த கடன், நிலுவையில் இருந்த சொத்துகள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம், பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம், விவசாயிகளுக்கு நன்மை என்று தருவார். 12ல் செல்லும்போது செப்டம்பர் 1 முதல் வியாதி மருத்துவ செலவுகளை தருவார். சாப்பாடு வகையில் சரியாக இருப்பது நல்லது. சனி பகவான் 6ல் வக்ரியாக பலத்த நன்மைகளை செய்கிறார். ஏற்கனவே வழக்குகள் இருந்தால் இந்த மாதம் அது உங்களுக்கு சாதகமான நிலையை தரும், கடன் நீங்கும், எதிரிகள் விலகுவார்கள், தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம், வீடுவாங்குதல் போன்றவை ஏற்படும். ராகு 11ல் இருந்தாலும் 10ம் இட பலனை தருவார். இருவித வருவாய், பூமி, நிலம் போன்றவற்றால் வருவாய், இதுவரை எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, நல்ல வேலை, தொழில் செய்வோருக்கு நாள் பட்ட சரக்கு விற்பனை, புதிய கஸ்டமர் கிடைத்தல், மற்ற கலைத்துறை அரசியல், விவசாயம், மாணவர் பெண்கள் என்று அனைவருக்கும் ராகுவால் நன்மை நடக்கும். பொதுவில் இந்த மாதம் பெரும்பாலான கிரஹங்கள் நன்மை தருவதால் பெரிய கஷ்டங்கள் ஏற்படாது. மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில், குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம் : மகம் – செப்டம்பர் 4, பூரம் – செப்டம்பர் 5, உத்திரம் 1 – செப்டம்பர் 6

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : ந்ருஸிம்ஹரை வழிபடுங்கள், ப்ரதோஷ காலங்களில் நரசிம்ம வழிபாடு நல்லதை செய்யும் மேலும் குல தெய்வ வழிபாடும் மன கவலையை போக்கும். அன்னதானம் நிறைய செய்யுங்கள்.

கன்யா ராசி (உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம் முடிய) :

ராசிநாதன் 12லும் பின் செப்டம்பர் 2முதல் ராசியிலும் சஞ்சரிக்கிறார், பெரிய நன்மைகள் இல்லை, தொல்லைகள் வலியவந்து சேரும், வீன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மன குழப்பம் இருந்து கொண்டிருக்கும். முதல் பாதியில் சூரியனுடன் சேர்வதால் பலவித யோசனைகள் இருந்து கொண்டிருக்கும், செயல்பட தடை இருக்கும், 12ல் சூரியன் ஆட்சி, தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும், திருட்டு பயம், களவு போகுதல் தாமதான தூக்கம் என்று கஷ்டங்கள் சூரியனால் ஏற்படும். சந்திரன் செப்டம்பர் 10 தேதிக்கு மேல் ஓரளவு நன்மை செய்கிறார். குருபகவான் 4ல் வக்ரி நண்பர்களால் சில சங்கடங்கள் அவப்பெயர், பொருளாதார சரிவு, கேதுவும் சேர்ந்து தூக்கத்தை கெடுப்பார் வீண் துக்கம் ஏற்படும். செவ்வாய் 8ல் பிறருக்கு கட்டுப்படுதல், இடறி விழுதல் செப்டம்பர் 10 முதல் வக்ரி ஓரளவு நன்மை, சுக்ரன் பத்திலும் பதினொன்றிலும் ஓரளவு நன்மை தருகிறார். மாத முற்பகுதியில் கஷ்டத்தை பண இழப்பை ஏற்படுத்துகிறார், கலகம் குழப்பம் இருக்கும். மாத பிற்பகுதியில் ஆடை ஆபரண சேர்க்கை வீட்டில் சுப நிகழ்வுகள், தெய்வ நம்பிக்கை கோயிலுக்கு செல்லுதல் தீர்த்த யாத்திரை என்று இருக்கும். 5ல் சனி வக்ரி குழந்தைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படும். படிப்புகளில் தடை வரும். புகழ் மங்கும். கர்ப ஸ்திரீகள் கவனமாக இருக்கவேண்டும். மனதில் பயம் உண்டாகாதிருக்க கர்பரக்ஷகாம்பாளை அல்லது உங்கள் குல தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டு விளக்கேற்றி ஸ்லோகங்களை சொல்லுங்கள். ராகு சுப செலவுகளை கொடுக்கிறார். வருமானத்தை பெருக்குகிறார். முயற்சிகளில் ஏற்படும் தடைகளை விலக்குகிறார். நல்ல செயல்களை செய்ய வைக்கிறார். பொதுவாக இந்த மாதம் பெரும்பாலான கிரஹம் நன்மை செய்யவில்லை, உத்தியோகத்தில் இருப்பவர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படலாம், புதிய வேலை கிடைக்க தாமதம் ஆகலாம், தொழில் செய்வோர் வருமான குறைவு ஏற்படும், போட்டிகள் அதிகரிக்கும். மற்ற கலைத்துறை, மீடியா, அரசியல், மாணவர்கள், விவசாயிகள் என்று அனைவருக்கும் சங்கடங்கள் இருந்து கொண்டிருக்கும். பெண்கள் மிக கவனத்துடன் எதையும் அனுகவேண்டும். பொதுவாக அனைவரும் பொறுமையும் நிதானமும் கடைபிடித்து இந்த மாதத்தை கடக்க வேண்டும்.

சந்திராஷ்டமம் : உத்திரம் 2,3,4 – செப்டம்பர் 6, ஹஸ்தம் – செப்டம்பர் 7, சித்திரை 1,2 – செப்டம்பர் 8

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : மஹாலக்ஷ்மி வழிபாடு, தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நல்ல பலனை தரும், தான தர்மங்கள் செய்வது, இயலாதவர் வயதானோருக்கு சரீர ஒத்தாசை செய்வது, எல்லோரிடமும் நல்ல வார்த்தைகளை பேசுதல் நன்மை தரும்.

துலா ராசி (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதம் முடிய) :

ராசிநாதன் சுக்ரன் மாத ஆரம்பத்தில் 9ல் கல்வியில் வளர்ச்சி, தர்மகாரியங்களில் ஈடுபடுதல் செல்வம் சேருதல், திருமணம் கைகூடுதல், பிள்ளை/பெண்ணுக்கு வரன் அமைதல், கேளிக்கை ஈடுபடுதல் ஆடை ஆபரண சேர்க்கை என்று தருகிறார், செப்டம்பர் 1ம் தேதிக்கு மேல் கொஞ்சம் பண செலவும், வீண் வம்புகளில் ஈடுபடுதல், எதிரிகளால் தொல்லையும் இருக்கும். ஆனால் ஜீவன வகையில் பாதிப்பு இருக்காது. சூரியன் 11ல் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகம் எதிரிகளை அழித்துவிடும், உத்யோகத்தில் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல் ஆதரவு, அரசாங்க உதவி, வங்கி மூலம் நன்மை, எதிர்பாராத லாபம், வருமானம் அதிகரித்தல், புதிய வாய்ப்புகள் என்று இருக்கும். சந்திரனும் அவ்வப்போது நன்மைகளை செய்கிறார். செவ்வாய் 7ல் குடல் சம்பந்தமான நோய், மனைவிக்கு உடல் பாதிப்பு, சண்டை என்று இருந்தாலும் செப்டம்பர் 10ல் வக்ரியாகும்போது மகிழ்ச்சியும் உடல் ஆரோக்கியமும் பூமி லாபமும் உண்டாகும். புதன் 11லும், 12லும் இந்த மாதம் சஞ்சரிக்கும் போது முதல் பாதி மகிழ்ச்சியும், தன ஆதாயமும் உண்டாகும், வாகன யோகம், செயல்களில் வெற்றி என்று இருக்கும். பிற்பகுதி கொஞ்சம் மன குழப்பம், சஞ்சலம் இருந்தாலும் பெரிய கெடுதல் இருக்காது. குரு 3ல் வக்ரியாக இருப்பது நல்லது வக்ரி அடையாமல் இருந்தால் குடும்பத்தில் ஜீவனத்தில் பாதிப்பு இருக்கும் முன்னேற்றமே இருக்காது. வக்ரியாவதாலும் கேதுவுடன் இணவதாலும் நல்ல பலன்கள் நிறைந்து இருக்கும். புகழ் பரவும், குரு பார்வையாலும் லாபத்தை தருகிறார். நோய்களை நீக்குகிறார். 4ல் சனிபகவான் வக்ரி பெரிய கெடுதல் என்று ஏதுமில்லை ஆனால் பத்தாம் பார்வையாக ராசியை பார்ப்பதால் உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு , சொந்த தொழிலில் லாபம், தொழில் விஸ்தாரணம், மற்ற பிரிவினருக்கும் நன்மை என்று நன்றாகவே இருக்கும். ராகுவும் 9ல் இருந்தாலும் 8க்குடைய பலனை தருகிறார் அபகீர்த்தி ஏற்படும் கவனம் தேவை வார்த்தைகளை விடுவதை தவிர்க்க வேண்டும். வாக்கு கொடுக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். அதே போல உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இவை ராகுவால் பாதிப்படையும். பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம், கெடுதல்கள் குறைவு, வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். சிறப்பான முன்னேற்றம் இருக்கிறது.

சந்திராஷ்டமம் :  சித்திரை 3,4 – செப்டம்பர் 8, ஸ்வாதி – செப்டம்பர் 9, விசாகம் 1,2,3 – செப்டம்பர் 10,11

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : நன்மைகள் அதிகம் இருப்பதால் இஷ்ட தெய்வம் குல தெய்வ வழிபாடு நன்மை தரும். முடிந்த அளவு அன்னதானம், வஸ்திர தானம் ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி, மாற்று திறனாளிகளுக்கு உதவுதல் நன்மை தரும்.

விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை) :

ராசிநாதன் செவ்வாய் 6ல் ஆட்சி வியாதி பூரணமாக குணமாகும், வழக்குகளில் வெற்றி உண்டாகும், வருவாயில் லாபம் உண்டாகும், குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் லக்ஷ்மீகரமான சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செப்டம்பர் 10ல் வக்ரியாகிறார் இருந்தாலும் பெரிய கெடுதல்கள் ஏதும் செய்யவில்லை, மெதுவான முன்னேற்றம் இருக்கும். சூரியன் 10ல் சஞ்சரித்து மிகுந்த நன்மையை தருகிறார். நோய் நொடி அறவே நீங்கும், சுறுசுறுப்பு உண்டாகும் உத்யோகம், தொழில்,வியாபாரம் என அனைத்து பிரிவினரும் ஜீவன வகையில் நல்ல முன்னேற்றத்தை அடைவர், சிலருக்கு புதிய வேலை கிடைக்கும், அயல்நாட்டு வாய்ப்பும் உண்டாகும். சந்திரன் ஒற்றை ராசிகளில் சஞ்சரிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் சுப நிகழ்வுகளையும் தருகிறார். புதன் செப்டம்பர் 2 வரை பத்தில், பின் 11ல் சஞ்சரித்து நல்ல ஆரோக்கியத்தை தருகிறார். உத்தியோகம், தொழில் நல்ல வளர்ச்சி அடையும், பேர் புகழ் உண்டாகும் எதிரிகள் மறைந்துவிடுவர், தன ஆதாயம், வாகன சுகம், எல்லோரும் இனிமையாக பழகுவார்கள், நல்ல வார்த்தைகள் வாயிலிருந்து வரும்,  குரு பகவான் 2ல் வக்ரி பொருளாதாரம் மேம்படும், புத்திர பாக்கியம், திருமணம் கைகூடுதல் என்று சிலருக்கு இருக்கும் இருந்தாலும் கேதுவுடன் இணைவதால் குடும்பத்தில் சஞ்சலம், கொஞ்சம் அதிருப்தி பண விரயம் குழந்தைகளால் சிறு சங்கடம் என்று இருக்கும். ஆனால் 3ல் ஆட்சியாகவும் வக்ரியாக இருக்கும் சனிபகவான் உங்கள் இஷ்டத்தை பூர்த்தி செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் நிறைந்து இருக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும் சனி பார்வையும் பலம் தருகிறது. சுக்ரன் 8ல் செப்டம்பர் 1வரை சில சங்கடங்கள், வாக்கில் கடுமை அதிருப்தி, மன சஞ்சலம் என்று தந்தாலும் அதன் பின் 9ல் பெயர்ச்சியாகி செல்வ சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை, விருந்து கேளிக்கை என்று தருகிறார். ராகு 8ல் இருந்தாலும் 7ன் பலனை தருவார் அவ்வளவு நன்மை இல்லை அது வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் பாதிப்பு இருக்கும் மருத்துவ செலவு ஏற்படும். இருந்தாலும் பெரிய அளவில் இருக்காது.  பொதுவில் இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் அதிக அளவில் இருப்பதால் வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். அனைத்து பிரிவினருக்கும் நல்லது இருக்கும்.

சந்திராஷ்டமம் : விசாகம் 4 – செப்டம்பர் 11, அனுஷம் – செப்டம்பர் 11,12, கேட்டை – செப்டம்பர் 12,13 வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : மகிழ்ச்சி அதிகம் இருப்பதால் அருகில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கோ லக்ஷ்மி கோவிலுக்கோ சென்று நெய் தீபம் ஏற்றுங்கள் முடிந்த அளவு அன்னதானம் தான தர்மம் செய்யுங்கள். ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுங்கள்

தனூர் ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய) :

ராசிநாதன் ஜென்ம ராசியில் வக்ரியாக கேதுவுடன் இணைவு, இடப்பெயற்சி உண்டாகும் கொஞ்சம் கவுரவ பாதிப்பு, எடுத்த செயல்களில் தடை, முயன்று முடித்தாலும் முடிவு பெறாத நிலை, 9ல் சூரியன் உத்தியோகத்தில் தொழிலில் மாற்றம் ஏற்படும். பெற்றோர் ஆரோக்கியம் பாதிக்கப்படும், பெரிய நன்மை ஏதும் இருக்காது. சந்திரனும் சரியான பலனை தரவில்லை, செவ்வாய் 5ல் ஆட்சி செப்டம்பர் 10வரை குழந்தைகள் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல், படிப்பில் தடை, புகழ் குறைவு, மனதில் பயம் தோன்றும், அதன்பின் வக்ரியாவதால் நன்மை இல்லை என்றாலும் பாதிப்பு இல்லை, புதன் செப்டம்பர் 2வரை வீண்பழி, அலைச்சல் ஞாபக மறதி இவற்றை கொடுக்கிறார் அதன் பின் மாதம் முழுவதும் நல்ல ஆரோக்கியம், உத்தியோகம் தொழில் வளர்ச்சி, அனைத்து பிரிவினருக்கும் முன்னேற்றம், சமூகத்தில் நல்ல பேர் புகழ் என்று தருகிறார். சுக்ரன் செப்டம்பர் 1 வரை நல்லதை செய்கிறார் வாழ்க்கை துணைவரின் உடல் நலம் முன்னேற்றம், குழந்தை பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடத்தல் என்று செய்து அதன் பின் 8ல் செல்வதால் பெரிய நன்மைகள் இல்லை என்றாலும் பாதிப்பும் இல்லை காரணம் சுக்ரன் பகைவீட்டில் சஞ்சரிக்கிறார். 2ல் சனி ஆட்சி வக்ரி கொஞ்சம் மருத்துவ செலவுகளை கொடுப்பார், குடும்ப உறுப்பினர்கள் உடல் பாதிப்பு ஏற்படும். ஜீவன வகையில் வருமான குறைவும் ஏற்படும். ராகு 7ல் இருந்தாலும் 6ன் பலனைத்தான் தருவார் கடன், வியாதி, எதிரி இவைகள் மறைந்துவிடும். வியாபர விருத்தி, உத்தியோகத்தில் முன்னேற்றம், தன ஆதாயம், என்று நன்மைகள் தருகிறார். பொதுவில் இந்த மாதகம் பெரும்பாலான கிரஹங்கள் ராசிநாதன் உட்பட நன்மை தரவில்லை சனி ராகு போன்றவை ஓரளவு நன்மை செய்கிறது. எதிலும் ஒரு கவனம், நிதானம் இருப்பது நல்லது. பெண்கள் உட்பட அனைத்து பிரிவினரும் தேவையில்லாமல் வாய்விடுவது, வீண் விவாதம் செய்வது, அநாவசியத்தில் செலவு பண்ணுவது என்பதை தவிர்க்க வேண்டும் ஓரளவு நிம்மதி ஏற்படும். சுமாரான மாதம்

சந்திராஷ்டமம் :  மூலம் – ஆகஸ்ட் 17 & செப்டம்பர் 14, பூராடம் – ஆகஸ்ட் 18 & செப்டம்பர் 15, உத்திராடம் 1 – ஆகஸ்ட் 19 & செப்டம்பர் 16

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : ஸ்ரீராமனை வணங்கி கொள்ளுங்கள் ராம நாமத்தை சொல்லி கொண்டிருங்கள் வறியவர்களுக்கு பொருளுதவி அன்னதானம் போன்றவற்றை செய்யுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.

மகர ராசி (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய) :

பொதுவாக சனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது கௌரவ பாதிப்பு, ஜீவன முடக்கம், வியாதியின் பாதிப்பு, தீவிபத்து, வழக்குகளில் சிக்குதல் போன்றுதல் ஏற்படும். ஆனால் உங்கள் ராசிநாதன் ஆட்சி வக்ரியாக இருப்பதாலும், மாதம் உண்டான லக்னத்துக்கு 12ல் இருப்பதாலும் ஓரளவு நன்மைகள் நடக்கின்றது, தொழிலில் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். மேலும் சூரியன் 8ல் ஆட்சியாக இருப்பதால் இடமாற்றம் உத்தியோக மாற்றம், ஓரளவு பணவரவு என்று இருக்கும். சந்திரன் மாத ஆரம்பத்தில் 6ல் சஞ்சரிக்கிறார் மகிழ்ச்சி அதிகரிக்கும், சுப நிகழ்ச்சிகளால் நன்மை உண்டாகும். செவ்வாய் 4ல் ஆட்சியாக இருப்பதால் சுகம் அதிகரிக்கும், ரத்த அழுத்த வியாதி உள்ளவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தசா புக்திகள் நன்றாக இருந்தால் பெரிய பிரச்சனை ஏற்படாது. புதன் 8ல் சஞ்சரித்து தெய்வத்தின் அனுகூலத்தை உண்டாக்குகிறது, ஆடை ஆபரண சித்தி, கல்வியில் முன்னேற்றம், தர்ம சிந்தனை, பிறருக்கு உபகாரம் செய்யும் எண்ணம் உண்டாகும். செப்டம்பர் 2ம் தேதிமுதல் 9ல் சஞ்சாரம் அவ்வளவு நன்மை இல்லை, கொஞ்சம் கவனமாக இருந்தால் வீண் பழியை தவிர்க்கலாம், அலைச்சலை தவிர்க்கலாம், தாய் தந்தையருக்கு பாதிப்பு ஏற்படும். குரு 12ல் வக்ரியாக  சுபகாரியங்களுக்காக பணம் விரயம் ஆகும், பிரயாணம் செய்யும் போது கவனமாக இல்லாவிடில் சிறுவிபத்து ஏற்படும், தீர்த்த யாத்திரை சிலர் மேற்கொள்வர். கேது 12ல் இருந்தாலும் 11க்கு உண்டான பலனை தருவார் எல்லா செயல்களிலும் வெற்றி, புகழ் வருவாய் பெருகுதல் , சேமிப்பு அதிகரிக்கும், உத்தியோகத்தில் தொழிலில் முன்னேற்றம் உண்டு சுக்ரன் முற்பகுதியில் 6ல் சஞ்சரிக்கிறார் கொஞ்சம் கடன் தொல்லை, வியாபாரத்தில் பின்னடைவு, கொடுத்த பணம் வசூலாவது கடினம், திருமணம் போன்ற சுப முயற்சிகள் தடை உண்டாகும். பிற்பகுதியில் 7ல் சஞ்சரித்து கணவர் மனைவிக்கு ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துவார், திருமணத்துக்கு முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கு வரன் நிச்சயம் ஆகும். ராகு 6ல் இருந்தாலும் 5க்குடைய பலனையே தருவதால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கும், அவர்களின் படிப்பில் தடை வரும் மந்த நிலை உண்டாகும். பண தட்டுப்பாடு இருக்கும். பொதுவாக இந்த மாதம் பெரும்பாலான கிரஹங்கள் நன்மையை அதிகம் செய்வதால் பெரிய கஷ்டங்கள் இருக்காது. இருந்தாலும் எதிலும் ஒரு கவனம் எச்சரிக்கை இருப்பதும் நல்லது.

சந்திராஷ்டமம் : உத்திராடம் 2,3,4 – ஆகஸ்ட் 19 & செப்டம்பர் 16, திருவோணம் – ஆகஸ்ட் 20, அவிட்டம் 1,2 – ஆகஸ்ட் 21

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அனுமனை வழிபடுதல், ராம நாமம் சொல்லுதல் அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தல் நல்லது தரும். முடிந்த அளவு அன்னதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி, வயோதிகர்களுக்கு சரீர உதவி செய்தல் இவை நன்மை தரும்.

கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதம் முடிய) ஆவணி மாத ராசி பலன்கள்

மாதம் தொடங்குவது கும்ப லக்னத்தில், லக்னாதிபதி சனி 12ல் வக்ரியாக ஆட்சியாக இதனால் அத்துமீறிய செலவுகள் நோயின் பாதிப்பு, மருத்துவ செலவு பிரயாண செலவு என்று இருந்தாலும், பார்வையால் வருமானத்தை, ஜீவன விருத்தி, சுப செலவுகள் என்றும் தருகிறார். சூரியன் 7ல் ஆட்சி பெரிய கெடுதல்களை செய்யமாட்டார், கணவர் மனைவிக்கு இடையில் விட்டுக்கொடுத்து போவதால் பாதிப்புகள் குறையும், எதிர்பாராத வெளியூர் பயணத்தை கொடுப்பார். சந்திரன் இரட்டைப்படை ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் மகிழ்ச்சியையும், சுப நிகழ்ச்சிகளால் ஆதாயத்தையும் தருவார், பொருளாதாரம் நன்றாக இருக்கும். செவ்வாய் 3ல் ஆட்சியாக இருப்பதால் வாகன யோகம், பூமி நிலம் வீடு யோகம் பால், தயிர், உணவு பொருள்கள் உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர் நல்ல முன்னேற்றம் அடைவர், உத்தியோகத்தில் பதவி உயர்வு, தொழிலில் லாபம் என்று இருக்கும். புதன் செப்டம்பர் 2க்கு பின் தான் நல்லதை செய்கிறார் இறையருளால் நல்லது நடக்கும் ஜீவனம் மேம்படும், குரு 11ல் வக்ரியாக இருப்பதும் நன்மைகள் ஓரளவுக்கு கிடைக்கும். ஏற்கனவே இழந்த பதவி கிடைக்கும் பெரிய கெடுதல்கள் ஏதும் இல்லாமல் இருப்பதே நன்மையாக இருக்கும். சுக்ரன் முதல் பாதியைல் செப்டம்பர் 1 வரை நன்மை செய்கிறார், குழந்தை பாக்கியம் வருமானம் பெருகுதல் எழுத்தாற்றல் வாக்கு வன்மை கூடுதல் என்று இருக்கும் அதன் பின் சில சிக்கல்கள் கடன் வாங்க வேண்டிய நிலை மேலும் எவருக்கும் பணம் கொடுத்திருந்தால் திரும்ப கிடைப்பது கடினம், மன கஷ்டம் ஏற்படும், கேது 11ல் இருந்தாலும் 10ன் பலனை தருகிறார் வருவாய் இரட்டிப்பாகுதல், உத்தியோக மாற்றம், இடமாற்றம் ஏற்படும், கடும் உழைப்பின் பலனை பெறுதல் இருக்கும். ராகு 4ன் பலனை தருகிறார் தூக்கமின்மை, முன்னேற்றத்தில் தடை, தாயார் வகையில் மருத்துவ செலவு என்று இருக்கும். பொதுவில் இந்த மாதத்தில் நன்மை தீமை 50-50 என்று இருக்கும். பணம் புகழ் வரும்போது ஆடாமல் அமைதியாக இருக்க வேண்டும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கஷ்ட காலங்களை சமாளிக்கலாம்.

சந்திராஷ்டமம் : அவிட்டம் 3,4 – ஆகஸ்ட் 21, சதயம் – ஆகஸ்ட் 22, பூரட்டாதி 1,2,3 – ஆகஸ்ட் 23

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயலகளும் : அம்பாளை மனதில் நினைத்து கொண்டு அருகிலுள்ள கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும், பைரவர் வழிபாடு சிறந்தது அன்னதானம் செய்யவும். இயலாதோருக்கு சரீர் ஒத்தாசை செய்யவும், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்யவும்.

மீன ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆவணி மாத ராசி பலன்கள் :

ராசிநாதன் குரு 10ல் வக்ரி ஆட்சி தொழில் , உத்தியோகம் இவற்றில் மாற்றம் ஏற்படலாம், அடிக்கடி உத்தியோகம் அல்லது வியாபாரம் நிமித்தம் பயணங்களை மேற்கொள்ளலாம், அல்லது பெரிய முன்னேற்றம் என்பது இருக்காது. பத்தில் கேதுவும் இருந்தாலும் அது 9ன் பலனை தருவதால் பண விரயம், குடும்பத்தில் சிறு சிறு பாதிப்புகள் முன்னேற்ற தடை என்று இருக்கும், சூரியன் 6ல் ஆட்சியாக  இருப்பதால் நோய்கள் அறவே நீங்கும், கஷ்டங்கள் எல்லாம் விலகும், உத்யோகம், தொழில் இவற்றில் முன்னேற்றம் ஏற்படும், நல்ல ஆதாயம் உண்டாகும், சந்திரன் தன்பங்குக்கு சில பல நன்மைகளை தந்து மகிழ்ச்சியை தருகிறார். செவ்வாய் இரண்டில் ஆட்சி பெரிய நன்மை இருக்காது குடும்பத்தில் மன அமைதி குறையும், வார்த்தைகளை விடுவதில் கவனமாக இருத்தல் நலம் தரும். புதன் மாத முற்பகுதியில் 6ல் பொருளாதார அபிவிருத்தி, அனைத்து செயல்களிலும் வெற்றி, குடும்பத்தில் சுபிக்ஷம், நல்ல பெயர் உண்டாகும் மாத பிற்பகுதியின் நன்மை தராது எனினும் ஆட்சி வீடு என்பதால் பெரிய கெடுதல் இருக்காது. சுக்ரன் செப்டம்பர் 1 வரை 4லில் எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகுதல், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருத்தல், மகிழ்ச்சி கேளிக்கை என்று இருக்கும் பிற்பகுதியிலும் பணத்தட்டுப்பாடு வராது, குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகலாம், எழுத்தாற்றல் நன்றாக இருக்கும். சனிபகவான் 11ல் வக்ரி ஆட்சி கடந்த காலத்தில் அடைந்த நஷ்டத்தை ஈடுகட்டலாம், பொருளாதாரம் மேம்படும், உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது கிஃப்ட் கிடைக்கலாம் தொழிலில் லாபம் உண்டாகும் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். கடன் வழக்கு, நோய் என்று எல்லாம் நீங்கிவிடும் ராகு 4ல் இருந்தாலும் 3ன் பலனை தருவதால் பெயர் புகழ் பரவும், குடும்பத்தில் திருமணம் கைகூடும், பணவரவு அதிகரிக்கும், கடன் வழக்கு எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைவர் கேது 10ல் இருந்தாலும் 9ன் பலனை தருவதால் சுப நிகழ்ச்சியால் பணம் செலவாகும், பெரிய கஷ்டங்கள் ஏற்படாது ஓரளவு சுமாரான பலனை கேது தரும். பொதுவில் இந்த மாதம் மிகுந்த நன்மைகள் இருக்கும். மகிழ்ச்சி அதிகமாகும் சேமிக்க பழகுங்கள் அனைத்து பிரிவினரும் நன்மை அடைவர்.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி 4 – ஆகஸ்ட் 23, உத்திரட்டாதி – ஆகஸ்ட் 24, ரேவதி – ஆகஸ்ட் 25

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும்  : நன்றாக இருப்பதால் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுங்கள், முடிந்தவரை அன்னதானம் மற்றும் தான தர்மங்களை நிறைய செய்யுங்கள்.

குறிப்பு:

இதுவரை சொல்லப்பட்ட ஆவணி மாத ராசி பலன்கள் எல்லாம் பொதுவானவை. உங்கள் ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் நல்லபலன்கள் அதிகமாகவும் கெடுபலன்கள் குறைவாகவும் இருக்கும். மேலும் தசாபுக்திகள் சாதகமாய் இருந்தாலும் நல்லதாகவே நடக்கும். உங்கள் ஜனன ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி ஆவணி மாத ராசி பலன்கள் சரிபார்த்து கொள்ளுங்கள்.

அன்புடன்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, I Block, Alsa Green park, Near MIT Gate

Nehru Nagar, Chrompet, Chennai – 600 044

Email: mannargudirs1960@gmail.com

Phone: 044-22230808 / 8056207965

Skype ID: Ravisarangan

!!சர்வே ஜனா சுகினோ பவந்து!!

இன்றைய ராசி பலன்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.