கன்யா ராசி

கன்யா ராசி(உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம் முடிய)–75/100

அர்த்தாஷ்டம சனியாய் 4ல் இருந்து அதிக சிரமங்களை கொடுத்த சனி பகவான் உங்களது பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் இடத்தில் இனி ப்ரவேசிக்கிறார். அதோடு களத்திர ஸ்தானத்தையும், குடும்ப ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். அடுத்த 3 ஆண்டுகள் மகிழ்ச்சியான வருடங்களாக இருக்கும். இடையில் தற்போது 4ல் குரு,கேது இணைவு சில சிரமங்களை கொடுத்தாலும் ஏப்ரல், மே, ஜூன் 2020ல் குருவின் அதிசார சஞ்சாரமும் பின் செப்டம்பரில் ராகு/கேது பெயர்ச்சியும் மிகுந்த நன்மைகளை செய்வதால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். செல்வம் சேரும், வீடு, வாகன யோகம் உண்டாகும். நினைத்த எண்ணங்கள் இதுவரை மறைந்து கிடந்த ஆசைகள் அனைத்தும் கைகூடும் காலம் இது. உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள்.அதன்படி நடக்கலாம்.

மற்ற கிரஹ நிலைகளும் சாதகமாய் இருப்பதால் இதுவரை இருந்து வந்த கடன் சுமைகள் உடல் உபாதைகள் குடும்ப பிரிவினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் ஏற்றமும் சமூக அந்தஸ்தும் உண்டாகும். இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்கிறது.

உடல் நலம் ஆரோக்கியம் :

சனி பகவன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் அடுத்த பத்து மாதங்களுக்கு குரு கேது இணைவு நுரையீரல், இருதையபாதிப்பு, அஜீரண கோளாறுகளை கொடுக்கும், தகுந்த மருத்துவ சிகிச்சை நல்லபலனை தரும், வியாதிகளின் தாக்கம் குறையும், குழந்தைகளின் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்பு உண்டாகும் கவனம் தேவை,  பெற்றோர்களுக்கும் சில உடல் உபாதைகள் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் தாக்கம் உண்டாகலாம் இருந்தாலும் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கும், கொஞ்சம் செலவு வைக்குமே தவிர பெரிய ஆரோக்கிய பாதிப்புகள் இருக்காது.

குடும்பம் மற்றும் உறவுகள்:

கணவன் மனைவிக்குள் அதிக நெருக்கம் இருக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறும், பெற்றோர்களுடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் மறைந்து சுமூக உறவு உண்டாகும், பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் வேலை நிமித்தம் அல்லது வேறு காரணங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இனி ஒன்று சேர்வர், பெரிய சச்சரவுகள் இனி இருக்காது, சனிபகவானின் வக்ர சஞ்சாரம், மற்றும் குரு கேது இணைவு அடுத்துவரும் பத்துமாதங்கள் கொஞ்சம் படுத்தும், உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய உறவுகளிம் இந்த சனிப்பெயர்ச்சியில் உண்டாகி நன்மை தரும்.

வேலை/உத்தியோகம் :

ஏற்கனவே மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தான பதவி கிடைக்கும், மற்றவர்களுக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு என்று கிடைக்கும், புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், வெளிநாட்டு உத்தியோகம் சிலருக்கு அமையும், இருக்கும் வேலையில் வெளிநாட்டு மாற்றம் ஏற்பட்டு சொகுசு வாழ்க்கையை வாழ வைக்கும், தேவைகள் பூர்த்தியாகும், இதுவரை அலுவலகத்தில் இருந்து வந்த அரசியல் நிலை மாறி உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும், எதிரிகள் அடங்குவர், சனி சஞ்சார காலங்களிலும் குரு கேது இணைவு காலங்களிலும் வேலை பளு கூடும். கவலை வேண்டாம் இனி நல்ல காலமே.

தொழிலதிபர்கள் :

வாடிகையாளர்கள் கூடுவதால் பொருளாதார நிலை உயரும், புதிய தொழில் விஸ்தரிப்பு எண்ணம் கைகூடும், வாகனம் சம்பந்தப்பட்ட தொழில், சுற்றுலா தொழில் , விவசாயப்பொருட்கள் செய்வோர் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும், பொதுவாக நன்றாக இருந்தாலும் அடுத்த பத்துமாதங்கள் குரு கேது இணைவு சில சிரங்களை கொடுக்கும் அதுபோக 2022 ஜூலைக்கு பின் கொஞ்சம் இழுபறியான நிலை இருக்கும், கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருக்கவும், கடன்கள் வாங்கும்போது யோசிக்கவும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது, போட்டிகள் எதிரிகள் தொந்தரவுகளும் இருக்கும். எதிலும் கவனம் தேவை.

மாணவர்கள் :

இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி படிப்பில் அதிக கவனம் செலுத்தி மதிப்பெண்கள் பெறுவர். வெளிநாட்டு படிப்பு சிலருக்கு கைகூடும், ஆராய்ச்சி மாதிரி படிப்புகள் தொழில்கல்வி மாணவர்கள் நல்ல ஏற்றம் பெறுவர், போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், இருந்தாலும் ஆசிரியர், பெற்றோர் ஆலோசனையை கேட்பது நல்லது நண்பர்களுடன் கவனமாக வெளியில் செல்லவும். 4ல் இருக்கும் கேது செப்டம்பர் 2020 வரை சில தொந்தரவுகளை தருவார். புத்தி தடுமாற்றம் ஏற்படும் கவணம் தேவை.

கலைஞர்கள் /அரசியல்வாதிகள்/விவசாயிகள் :

கலைஞ்சர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும், புகழ், பணம் செல்வாக்கு எல்லாம் கூடும், இருந்தாலும் சனி வக்ர சஞ்சாரகாலங்கள் குரு கேது இணைவு காலங்கள் கொஞ்சம் தடுமாற்றத்தை தரும், எதிலும் ஒரு கவனம் தேவை சிக்கனமாகவும் இருக்க வேண்டும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வது பிற்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை தரும். அரசியல்வாதிகள் பதவி கிடைப்பதை கெட்டியாக பிடித்து கொண்டு சேவைகளை அதிகம் செய்யவேண்டும் எதிரிகள் அவ்வப்போது தொல்லை கொடுப்பர் தொண்டர்களை தக்க வைக்க பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். பணப்புழக்கம் தாராளம், கட்சி மேலிடத்துடன் அனுசரித்து செல்வது நலம் தரும். விவசாயிகள் புது பண ப்பயிர்களை சாகுபடி செய்து அதிக வசூலை பெறுவர், வழக்குகள் சாதகமாய் இருக்கும், வீட்டில் சுப நிக்ழவுகள், புதிய பூமி வாங்கும் நிலை எல்லாம் இருந்தாலும், புதிய வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் முடிந்தவரை வீன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் :

மேற்சொன்ன பலன்கள் சற்று கூடுதலாக இருக்கும். பெண்களுக்கு உற்சாகம் கூடுதலாக இருக்கும். விருந்து கேளிக்கைகள், குடும்ப விழாக்கள் என்று மகிழ்ச்சி அதிகரிக்கும், அதே சமயம் சனி வக்ர சஞ்சார காலங்களில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும் கவனம் தேவை நிதானம் வார்த்தைகளை அளந்து பேசுதல் பொறுமை விட்டுக்கொடுத்து போகும் தன்மை இவை நன்மை தரும். உழைக்கும் மகளிருக்கு மேன்மை உண்டாகும்.

ப்ரார்த்தனைகளும் வணங்கவேண்டிய தெய்வமும் :

அரங்கநாதரை சேவிப்பது, பாம்பு படுக்கையில் பள்ளி கொண்ட பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுதல், திருப்பள்ளி எழுச்சி படிப்பது, கோயில் உழவாரப்பணி செய்வது, முடிந்தவரை தான தர்மங்களை செய்வது, முடியாதவர்கள் முடவர்களுக்கு சரீரத்தினால் உதவி செய்வது போன்றவை மிகுந்த நன்மையை தரும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.