தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – முன்னுரை

ஓம் நமோ நாராயணா!

கம்ப இராமாயணம்.  யு.கா-வில் வரும் முக்கியமான படலம் ‘இரணிய வதைப் படலம்‘.

இராமபிரானின் மனைவியான சீதாப்பிராட்டியைக் கவர்ந்து, சிறை வைத்திருப்பது தவறு என்று வீடணன் எத்துணை முறை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இராவணன்.  அது வேப்பங்காயை விடக் கசப்பாய் இருக்கிறது; இறக்கும் தருவாயில் இருக்கும் தீயோனிடம் நல்லுரைகள் எடுபடுமா என்ன?

இராமபிரான் திருமாலின் வடிவு என்பதை உணர்ந்திருக்கிறான் வீடணன்.  அதனாலேயே, இரணியனின் வதைப் படலத்தை விரிவாக தன் தமையனுக்கு உரைக்கிறான்.

இறைவனாகிய பெருமாளை ஏற்காது, உலகினுக்குத் தீங்கு செய்து வாழ்வோர் எவராயினும், எத்துணை சக்தி கொண்டவரும், அழிந்து படுவர் என்பதை இராவணனுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை அமைச்சனாகவும் இருக்கும் வீடணனுக்கு இருக்கிறது.  அதே போல பரமனுக்குப் பணிந்த பிரகலாதனைப் போன்று பேறு பெற்றவரும், பக்தி மிக்கவரும் எவருமிலர் என்பதையும் அழுத்தமாய்ப் பதிவு செய்கிறான் வீடணன்.

கம்ப இராமாயணத்தில் மட்டுமே வரும் ‘இரணிய வதைப் படலம்’ வான்மீகி இராமாயணத்தில் இல்லை.  177 பாக்கள் கொண்ட வதைப் படலத்தின் கம்பன் சொல்லாட்சி வழக்கம்போல நம் எழுத்தை விஞ்சி நிற்கிறது.

நாளை அழகிய சிங்கர் (எ) ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் ஜயந்தி நன்னாளில், அவரின் தாள்களைப் பற்றி இத்தொடரைப் பணிவுடன் தொடங்குகிறோம்.

( முன்பு பேஸ்புக் குழுமத்தில் எழுதிய பொழுது எழுதிய முன்னுரை)

இத்தொகுப்பும் ஆக்கமும் உருவாக உதவியாயிருந்த நூல்கள்/சுட்டிகள்:

  • TVU – கம்ப இராமாயணம், யுத்த காண்டம் – பகுதி 1, இரணிய வதைப் படலம்
  • ஶ்ரீ நாராயணீயம் – 3-4ம் பாகங்கள் – சேங்காலிபுரம் ஶ்ரீ தீக்ஷிதர் சுவாமிகள்
  • ஶ்ரீமத் பாகவத ரஸாம்ருதம் – எம்.கே. வெங்கட்ராமன் – லிஃப்கோ

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.