சார்வரி வருஷம் பங்குனி மாத ராசி பலன்கள்

நாளது ஆங்கில வருடம் மார்ச் மாதம் 14ம் தேதி மாலை 06.03.42 மணிக்கு சூரியன் கும்பத்தில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சியாகிறார். 14.04.2021 இரவு 01.32.06 மணி வரை மீனத்தில் சஞ்சரிக்கிறார்.  அதுவரையிலான ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள்.

குறிப்பு : இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வு குரு கும்பராசிக்கு பெயர்வது (கும்பராசி பலனை தருவார்) அதை ஒட்டியும் பலன் சொல்லப்பட்டு இருக்கு. மேலும் முக்கியமான தினம் அது அந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள் (சந்திராஷ்டமம் தவிர)

இது பொதுப்பலன், அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலனை அறிந்து கொள்வது சிறந்தது

மேஷம் : (அஸ்வினி 4பாதம், பரணி 4பாதம் , கிருத்திகை 1ம் பாதம் முடிய) :

நல்லது செய்யும் கிரஹங்கள் குருவும், சுக்ரனும், மாத முற்பகுதியில் புதன், பொருளாதாரம் வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும், வீடு மாற்றம் அல்லது வாகன யோகம் போன்றவை இருக்கும். சனி உத்தியோகத்தில் தொழிலில் வருமானத்தை தருவார் ஆனால் பெரிய ஆதரவு இருக்காது. கல்வி போன்ற விஷயங்களும் வேலை மாற்றம் வேலை கிடைத்தல் வெளிநாடு போன்ற வாய்ப்புகளும் இருக்கும். பணக்கஷ்டம் என்பது குறைவாக இருக்கும் அதே நேரம் உங்கள் ராசி நாதன் 2ல் ராகுவுடன், மன அழுத்தம், உறவினர் நண்பர்களால் தொல்லை, வேலை /தொழில்/படிப்பில் பிரச்சனைகள் உடல் ஆரோக்கியம் பாதித்தல் வாழ்க்கை துணை,பிள்ளைகள், உறவுகள் வைத்திய செலவு, வீன் விரயம், கடன், எதிரிகள் அதிகமாதல் வார்த்தையில் நிதானம் இன்மையால் வரும் தொல்லை என்று சூரியன், கேது புதன் என்று எல்லோருமே கஷ்டத்தை கொடுக்கிறார்கள் குரு சுக்ரன் மட்டுமே இந்தமாதம் உங்கள் வண்டியை இழுத்து செல்கிறார்கள். சுமாரான மாதம்

முக்கிய நிகழ்வு/கவனம் : ராகு,கேது,ராசிநாதன், மற்றும் 01.04.21க்கு பின் புதன் என்று அனுகூலமற்ற நிகழ்வுகள், மன வருத்தம், வீண் விரயம், வைத்திய செலவு, பிரிவு, வார்த்தைகளில் நிதானம் அல்லாதது உறவில் பிரிவு போன்றவையும், திருமண தடைகள் மற்ற முயற்சிகளில் பின்னடைவு என்று இருக்கும் எதையும் யோசித்து பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்வது நலம் தரும்.

சந்திராஷ்டமம்: அஸ்வினி – 01.04.21, பரணி – 02.04.21, கிருத்திகை 1 – 03.04.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

குலதெய்வம் & இஷ்ட தெய்வ வழிபாடும், மனதை ஒருமுக படுத்தி இறைவனின் திருநாமத்தை காலையில் விழிப்புவந்தவுடன் 28 தடவை, இரவு உறங்குமுன் 108 தடவை சொல்லி வருவது மனம் அமைதி அடையும் செயல்களில் வெற்றி உண்டாகும். அன்ன தானம் முடிந்த தர்மங்களை செய்வதும் நன்மை தரும்.

ரிஷபம் : (கிருத்திகை 2,3,4பாதங்கள், ரோகிணி 4பாதம், மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய):

உங்கள் ராசியில் இருக்கும் செவ்வாய்,ராகு, கேது தவிர மற்ற எல்லா கிரஹங்களும் அதிக நன்மை செய்கின்றன என சொல்லலாம். பொருளாதாரம் மேம்படும். பணவரவு தாராளம், ஆடை ஆபரண சேர்க்கை கேளிக்கை, புது நிலம் வீடுவாங்குதல், வாகனம் வாங்குதல் எதிரிகள் மறைவர், புகழ் பரவும், இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் புதிய உறவுகள், குழந்தை செல்வம் உண்டாதல், முயற்சிகளில் வெற்றி, உத்தியோகத்தில் மாற்றம் ஏற்றம், சொந்த தொழிலில் நல்ல லாபம், அனைத்து துறையினரும் பயன் அடைவர், அரசாங்கத்தால் நன்மை, கணவன் மனைவி, குழந்தைகள் ஒற்றுமை, அக்கம்பக்கத்தார் உறவுகள் மூலம் நன்மையும் மகிழ்ச்சியும் உண்டாகும் சமூக அந்தஸ்து உண்டாகும், பொறுமை நிதான்ம் வந்துவிடும். சொத்து சேர்ப்பீர்கள், முதலீடுகள் லாபம் தரும். மனதில் உற்சாகம் தெய்வ பக்தி கூடுதல், பகை விலகுதல், உங்கள் செயல்களால் மற்றவர் உங்கள் மீது மரியாதை கொள்வர், திடீர் பனவரவு, பொருள் வரவு, நீண்ட நாள் தடைபட்ட விஷயங்கள் கைகூடுதல், பெரியோர்கள் ஆசீர்வாதங்கள் என்று நன்மை அதிகம் இருந்தாலும் செவ்வாயும் ராகுவும் கேதும் மன உளைச்சல் வீண் விரயம், சிந்திக்கும் திறன் குறைவு, அவசரப்படுதல், விபத்துகள் சிறு காயங்கள், உடல் நல குறைவு வாழ்க்கை துணைவர் உடல் நலம் பாதித்தல் இப்படி சில சங்கடங்களும் இருந்து கொண்டிருக்கும் பொதுவில் இந்த மாதம் மிகுந்த நன்மை இருக்கு. கொஞ்சம் கவனமாகவும் பெரியோர் ஆலோசனை படியும் நடப்பது கெடுதலை குறைக்கும்.

முக்கிய நிகழ்வு/கவனம் : விபத்துகளால் சிறு சிறு காயம் ஏற்படுதல், வாகனத்தில் பயணிக்கும் போது கவனம் தேவை, மறதியினாலும் அவசரப்படுவதாலும் செயல்களில் தடையும் சில விரோதமும் உண்டாகும். இந்த மாதம் உங்கள் நலம் விரும்புவர் ஆலோசனை படி நடப்பது நலம் தரும். எந்த ஒருசெயலையும் அவரை கலந்து செய்யுங்கள்

சந்திராஷ்டமம்: கிருத்திகை 2,3,4  – 03.04.21, ரோஹிணி – 04.04.21, மிருகசீரிடம் 1,2 – 05.04.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

வைத்யநாதர், மஹாலக்ஷ்மி, கோயிலில் விளக்கேற்றுங்கள். ஸ்ரீதுதி படிக்கலாம், வைத்யநாதாஷ்டகம்,அல்லது இஷ்ட தெய்வ பெயரை உச்சரித்தலும் நன்மை தரும். தர்மங்களை முடிந்த அளவு செய்யுங்கள். மாற்று திறனாளிகளுக்கும் வயோதிகர்களுக்கும் சரீர உதவியை செய்யுங்கள்.

மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4 பாதங்கள், புனர்பூஸம் 1,2,3 பாதங்கள் முடிய) :

மாதம் முழுவதும் சூரியன், குரு, சுக்ரன், கேது,ராகு & 01.04.21 முதல் ராசிநாதன் புதன் நல்ல பலனை தருகின்றனர். நோய் நொடிகள் நீங்கும் இதுவரை இருந்து வந்த எதிரி தொல்லைகள், வழக்குகள் சாதக நிலைக்கு திரும்பும், சிலருக்கு உத்தியோகத்தில் புதிய பொறுப்பு சம்பள உயர்வு, வேலை முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் அதன் மூலம் பொருளாதார மேம்பாடு, இல்லத்தில் தடைபட்டு அல்லது தாமதமாகிக்கொண்டிருந்த திருமண ஏற்பாடுகள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும், புதிய வீடு வாகனம் அமையும் எதிலும் வெற்றி வாக்கு வண்மை கூடும், புகழ் மரியாதை அதிகம் ஆகும், குடும்பத்தில் ஒற்றுமை, சேமிப்பு கூடுதல் பிள்ளைகளால் பெருமை, கணவன் மனைவி அந்யோந்யம் இருக்கும், கல்வியில் நல்ல நிலை இருக்கும் வெளிநாட்டு படிப்பு உயர்படிப்பு போன்ற எண்ணங்கள் ஈடேறும். சொந்த தொழில் தொடங்க நினைப்பவருக்கு அது கைகூடும் வியாபாரம் தொழில் செய்வோர் அனைத்து பிரிவினரும் லாபம் பார்ப்பர். விருந்து கேளிக்கைகள் இருக்கும். தெய்வ அனுகூலம் உண்டாகும். 12ல் இருக்கும் செவ்வாயால் வீன் விரயம், எதிர்பாரா துக்கம் அல்லது தொல்லை உண்டாகும்  பயமும் இருக்கும், தேவையில்லாத விவாதம் அதனால் மன உளைச்சல் என இருக்கும் பொதுவில் நன்மை அதிகம் இருப்பதால் கவலை வேண்டாம்.

முக்கிய நிகழ்வு/கவனம் : உறவினர் நண்பர்கள் இடையே பேச்சில் கவனம் தேவை, விரோதம் உண்டாகும் மன உளைச்சல் இருக்கும், நெருங்கிய உறவில் துக்கம் வரும். அகால தூக்கமும் உண்டாகும் பயணத்தில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் 3,4 – 05.04.21, திருவாதிரை – 06.04.21, புனர்பூசம் 1,2,3 – 07.04.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

வேங்கடாஜலபதி, நின்ற திருக்கோல பெருமாள், கோயிலில் விளக்கேற்றுதல் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தல், ஓம் நமோ நாராயணா என்று காலை 28 தடவை இரவு உறங்க செல்லுமுன் 108 தடவை உச்சரிப்பதும், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுதல் அன்னதானம் இவை நன்மை தரும்.

கடகம் : (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4பாதங்கள், ஆயில்யம் 4பாதங்கள் முடிய) :

செவ்வாய்,ராகு, புதன், சுக்ரன் பலவித நன்மையை தரும் அதே நேரம் குரு,சூரியன், சந்திரன், கேது சிக்கல்கள் மன துயர்கள் காரிய தடை போன்றவற்றை செய்கிறார்கள் இந்த கூட்டு பலம் சமமாக இருப்பதால் நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும். செவ்வாயால் பணவரவு, ராகுவால் உத்தியோகத்தில் தொழிலில் முன்னேற்றம் புதனால் தெய்வ அனுகூலம், சுக்ரனால் திருமணம் கைகூடுதல், ஆடை ஆபரண சேர்க்கை, கேளிக்கைகள் விருந்து, பணத்தட்டுப்பாடு இல்லாமல் கிரஹங்கள் செய்வதும், புதிய வீடு வாகன யோகங்கள், கல்வியில் நல்ல முன்னேற்றம் குடும்பத்தில் ஒற்றுமை, பிள்ளைகளால் நன்மை, உறவுகளுடன் ஒற்றுமை என்று இருந்தாலும் சூரியன் வீன் பழி தருவார் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க நேரிடும். கடந்த காலங்களில் இருந்த சேமிப்பு கரைய ஆரம்பிக்கும் குரு 8ல் பெயருக்கு களங்கம், மன உளைச்சல், குடும்பத்தில் சலசலப்பு உண்டாகுதல் கேது பிள்ளைகளால் பிரச்சனை பிள்ளை உடல் ஆரோக்கிய பாதிப்பு வைத்திய செலவு, பெற்றோர்களால் வைத்தியசெலவு உண்டாகலாம், பொதுவாக நன்மை தீமை கலந்து இருப்பதால் எதிலும் கவனமும் செயல்களை தொடங்கும்போது நிதானம் யோசித்து செயல்படுவது என்று இருக்க வேண்டும். புதனால் வழக்குகளில் சிக்கலாம். கவனம் தேவை. தகுந்த ஆலோசனை பெற்று எதையும் செய்யவும். உத்தியோகம் சொந்த தொழில் செய்வோர் மற்றும் பெண்கள் இவர்கள் மற்றவர்களுடன் வார்த்தைகளை கவனித்து பேசவேண்டும் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

முக்கிய நிகழ்வு/கவனம் : பெற்றோர் வழியில் உடல் நலம் பாதிப்படையலாம். 01.04.21 முதல் மிகுந்த கவனம், வீண் விவாதம் தவிர்ப்பது நல்லது. அபவாதங்கள் வழக்குகள் உண்டாகும். குழந்தைகளாலும் பிரச்சனை வரலாம்

சந்திராஷ்டமம்: புனர்பூசம் – 07.04.21, பூசம் – 08.04.21, ஆயில்யம் – 09.04.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

குலதெய்வம், பைரவர், நரசிம்மர், பிள்ளையார் கோயில்களில் வழிபாடு செய்வது, விளக்கேற்றுவது, ஸ்லோகங்களை சொல்வது, கோயில் உழவாரப்பணி செய்வது, அன்னதானம், தான தர்மங்களை செய்வதும் நன்மை தரும்.

சிம்மம் (மகம் 4 பாதங்கள், பூரம் 4பாதங்கள், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

மாதம் முழுவதும் சனி, குரு, ராகு, 01.04.21 முதல் புதன் இவர்கள் மட்டுமே நன்மை தருகின்றனர். எதிரிகள் விலகுவர், வழக்கும், கடன், இவைகள் குறைய ஆரம்பிக்கும், பொருள் வரவு, ராகுவால் உத்தியோகத்தில் இரட்டை வருவாய், சொந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். பூமி, நிலம், வீடு போன்ற இனங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் இடமாற்றம், சொந்த தொழில் விஸ்தரிப்பு, பொருளாதார ஏற்றம், நாள்பட்ட சரக்குகள் விற்பனை, இல்லத்தில் சுப நிகழ்வுகள், கணவன் மனைவி ஒற்றுமை,  குழந்தை பாக்கியம், புதிய வீடு குடிபுகுதல், பிள்ளைகளால் பெருமை, கல்வியில் முன்னேற்றம், திருமண ஏற்பாடுகள் கைகூடுதல் என நன்மைகள் இருந்தாலும், 8ல் இருக்கும்சூரியன் பின்னர் 8க்கு வரும் சுக்ரன், 4ல் இருக்கும் கேது, 10ல் இருக்கும் செவ்வாய் என்று இவர்கள் உடல் வயிறு,பிரயாண களைப்பு, பயணத்தில் சிறு பாதிப்பு, பேச்சில் கடுமை, அனைத்து செயல்களிலும் தடை, தாயார் வழியில் துக்கம், இப்படி பாதிப்புகளும் இருக்கும். ஒருபக்கம் பணம் வரும் இன்னொருபக்கம் வைத்திய செலவு, வழக்கு செலவு என்று இருந்து கொண்டே இருக்கும். எல்லாம் இருந்தும் இல்லாதது போல ஒரு எண்ணம் உண்டாகும்.

முக்கிய நிகழ்வு/கவனம் : பயணத்தில் கவனம் தேவை, பேச்சில் கடுமை உண்டாவதை தவிர்க்கவும். பெற்றோரில் தாயார் உடல் நிலை பாதித்து மருத்துவ செலவு அதிகம் ஆகலாம்.மேலும் உத்தியோகஸ்தர்களும், சொந்த தொழில் செய்வோரும் சாட்சி கையெழுத்து அடுத்தவருக்கு உத்திரவாதம் தருதல், அரசாங்க தொடர்பு விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நலம். உடனடியாக பாதிப்பு இல்லை எனினும் அடுத்து வரும் குருப்பெயர்ச்சி இதனால் பாதிப்பை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்: மகம் – 14.03.21 & 10.04.21,  பூரம் – 15.03.21 & 11.04.21, உத்திரம் 1 – 16.03.21 & 12.04.21, 13.04.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

கால பைரவர், சாஸ்தா, கருப்பு, மற்றும் எல்லை தெய்வங்கள் இந்த கோயிலுக்கு சென்று விளக்கேற்றுதல், உழவாரப்பணி, அமர்ந்து தியானம் செய்தல், பைரவ அஷ்டகம் படித்தல் அன்னதானம் , வஸ்திர தானம் மற்றும் முடிந்த அளவு எளியோருக்கு சரீர ஒத்தாசை நலம் தரும்.

கன்னி : (உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 4பாதம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய):

ராசிநாதன் புதன் 31.03.21 வரையிலும், மாதம் முழுவதும் சுக்ரன், கேது இருவரும் சனி பரவாயில்லை என்ற அளவிலும் பலன் தருகின்றனர். கிட்த்தட்ட நன்மைகள் அதிகம் இருக்கு. கிரஹவலிமை கொண்டு பார்க்கும்போது, புகழ் கீர்த்தி பரவும், நோய்கள் நீங்கிவிடும். பொருளாதார நிலை மேம்படும், உத்தியோகத்தில் பதவி சம்பள உயர்வு, வியாபாரம் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம், ஆடை ஆபரண சேர்க்கை, வழக்குகள் சாதக முடிவு, குடும்பத்தில் ஒற்றுமை கணவன் மனைவி நெருக்கம், சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகுதல், எதிர்பார்த்த திருமணம் கைகூடுதல், இல்லத்தில் சுப காரியங்கள் நடத்தல் சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைத்தல் கல்வியில் முன்னேற்றம், புதிய பூமி, வீடு கிடைத்தல், ஜீவன வகையில் ஆதாயம், பெரியோர்கள் ஆசிகள் தெய்வ அனுகூலம் என நன்மை அதிகம் இருக்கிறது. அதே நேரம் மற்ற கிரஹங்களால் ஜீரண கோளாறுகள், வாழ்க்கை துணைவரின் வைத்திய செலவு, எதிர்பாரா பயணங்கள் மூலம் அவஸ்தை, வாழ்க்கை துணைவரின் உறவுகள் மூலம் கலகம், நினைப்பதற்கு மாறாக நடத்தல், உடல் பலஹீனம், குடும்பத்தில் சச்சரவு, பணம் முடங்குதல், கடன் வாங்கும் நிலை, கர்பிணி பெண்களுக்கு பாதிப்பு, இப்படி இருந்து கொண்டிருக்கும். தனிப்பட்ட ஜாதகத்தில் மற்ற கிரஹ வலிமையை கொண்டு இது கூடவோ குறைவாகவோ இருக்கும் ஆனால் நிச்சயம் இந்த பாதிப்புகள் இருக்கும்.

முக்கிய நிகழ்வு/கவனம் : ஆகாரத்தில் கவனம், வாழ்க்கை துணைவர் உடல் நிலை, வைத்திய சிலவுகள், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இவற்றில் கவனம் தேவை ஜீவனவகையில் பிரச்சனை வரலாம்

சந்திராஷ்டமம்: உத்திரம் 2,3,4 – 16.03.21 & 12.04.21,13.04.21, ஹஸ்தம் – 17.03.21, சித்திரை 1,2 – 18.03.21, 19.03.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

செந்தில் ஆண்டவர், பால முருகன், கோயிலில் விளக்கேற்றுங்கள், ஏழைகளுக்கு அன்னதானம், இயலாதோருக்கு சரீர ஒத்தாசை, பறவைகள் விலங்குகளுக்கு உணவிடுதல் போன்றவை நன்மை தரும்.

துலாம் : (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4பாதம், விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :

சூரியன், குரு மாதம் முழுவதும் பெரிய அளவில் பலன் தருகின்றனர். சுக்ரனும் மாத ஆரம்பத்திலும், புதன் 01.04.21க்கு பிறகும் நல்ல பலனை தருகின்றனர். மற்ற கிரஹங்கள் சிரிய அளவில் கெடுதல் செய்கின்றனர். பெரிய பாதிப்பு பொதுவில் இல்லை இதுவரை இருந்து வந்த மன சோர்வும் களைப்பும், உடல் பிணியும் இருந்த இடம் தெரியாமல் மறையும் பொருளாதார அபிவிருத்தி உண்டாகும், இல்லத்தில் சுப சூழல்களும் தாமதமாகி கொண்டிருந்த திருமணம் குழந்தை பாக்கியம், புதுவீடு போன்ற அனைத்தும் இந்த மாதம் உங்களை தேடி வரும். பண தட்டுப்பாடு இருக்காது. இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். பெற்றோர் சகோதர வகை உறவினர்கள் நெருங்கி வருவர், பெயர் புகழ் ஓங்கும், பிள்ளையால் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கும் விரும்பிய இடமாற்றம் இருக்கும், சிலர் புது வீடு வாங்கலாம் அல்லது குடி போகலாம், சொந்த தொழில் விஸ்தாரணம் லாபம், அரசாங்க உதவி, வங்கி கடன், பெண்கள் பார்ட்னராக உள்ள நிறுவனம் வளர்ச்சி பெறுதல், நாள்பட்ட சரக்கு விற்று லாபம், அனைத்து பிரிவினருக்கும் ஜீவன வகையில் ஏற்றம் நினைத்த எண்ணங்கள் கைகூடுதல், மகிழ்ச்சி அதிகரித்தல், இப்படி பெரும்பாலும் நன்மையாகவே இருக்கும். 8ல் செவ்வாய்,ராகு  எடுத்த காரியம் தாமதம் ஆகும், நண்பர்கள் சதி செய்வர், பெயருக்கு களங்கம் உண்டாகும் சிறு சிறு விபத்துகளும் இருக்கும். யாரிடமும் வாக்கு கொடுக்காமல் அல்லது மனதில் உள்ளதை ஷேர் செய்யாமல் இருப்பது இவற்றை தவிர்க்கும், பொதுவில் நன்மை அதிகம்.

முக்கிய நிகழ்வு/கவனம் : வாகனம் ஓட்டும் போதும், தூர பயணம் இவற்றில் அதிக ஜாக்கிரதை உணர்வு வேண்டும். நெருங்கிய நண்பர்கள் உடன் வேலை செய்வோரிடம் கருத்துகளை பறிமாறுவதாலும் துன்பம் நேரும். பெற்றோர் வழியில் திடீர் வைத்திய செலவு உண்டாகும்.

சந்திராஷ்டமம்: சித்திரை 3,4 – 18 & 19.03.21, ரோஹிணி – 19 & 20.03.21, விசாகம் 1,2,3 – 20 &21.03.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

யோக நரசிம்மர், துர்க்கை, அருகில் உள்ள கோயிலில் விளக்கேற்றுவது,தெரிந்த ஸ்லோகங்களை சொல்வது, அன்னதானம், வஸ்திர தானம், மாற்றுத்திறனாளிகளுக்கு சரீர ஒத்தாசை ஏழை வயதானவர்களுக்கு அவர்கள் விரும்புவதை தருவது போன்றவை நலம் தரும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம் 4பாதம், கேட்டை 4பாதம் முடிய):

மாதம் முழுவதும் சனி, சுக்ரன், மற்றும் 31.03.21 வரை புதன் பெருமூச்சு விடற அளவுக்கு நன்மை செய்கின்றனர் ஆனால் அது யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல இருக்கும். ராசிநாதன் 7ல், ராகுவுடன் இருந்தாலும் கெடுதல் எதுவும் தரவில்லை என்பது ஒரு ஆறுதல், மற்றபடி எல்லா கிரஹங்களும் நன்மை தரவில்லை. ரொம்ப கவனமாகவும் முக்கியமாக கோபத்தை விட்டுவிடுவதும் மிக நன்மை தரும். வியாதி உக்கிரமாக தோன்றும், மன உளைச்சல், குழந்தைகளாள் துன்பம், உறவினர் நண்பர்கள் வகையில் தொல்லை சேமிப்பு கரைதல், அபகீர்த்தி உண்டாகுதல், பெற்றோர் வழியில் வைத்திய செலவு உத்தியோகத்தில் சுணக்கம், இடமாற்றம் அதனால் கஷ்டம், சிலருக்கு வேலை போகுதல், ஜீவன வகையில் கஷ்டம், சொந்த தொழில் பின்னடைவு கடன் தொல்லை இப்படி நிறையவே மற்ற கிரஹங்கள் தருகின்றன. ஒரு நல்ல விஷயம் சனி 3ல் ஆட்சியாக இருப்பது ஒற்றை ஆளாக அத்தனை கிரஹங்கள் தரும் கெடுதல்களையும் நெருங்கவிடாமல் அதனால் துன்பம் ஏற்பட்டுவிடாதபடி மன தைரியத்தை கொடுத்து உங்களை காக்கிறார் என சொல்லலாம். உங்கள் ஜனன ஜாதகம் எப்படி இருந்தாலும் சில உபாயத்தின் மூலம் கெடுதல்களை தவிர்க்கலாம். விசாகம் 4ம் பாதம் – பூசம் அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, ஸ்வாதி,சதயம் இந்த தாராபலன் உள்ள நாளிலும் அனுஷம் – ரேவதி, புனர்பூசம் இந்த நாளிலும் , கேட்டை – மகம் மூலம், அஸ்வினி, உத்திரம் உத்திராடம், அனுஷம், உத்திரட்டாதி, பூசம் இந்த நாளிலும் தங்கள் முயற்சிகளையும் விருப்பங்களையும் செய்தால் வெற்றி உண்டாகும். பொதுவில் வெகு சுமார் மாதம்.

கவனம் : முன்கோபத்தை நிறுத்துவது நன்மை தரும், அவசரப்பட வேண்டாம் மன உளைச்சலை உறவினர் நண்பர் உயர் அதிகாரிகள் தரும் சூழல் உண்டாகும் அந்த சமயத்தில் இஷ்ட தெய்வ ப்ரார்த்தனை பலம் தரும் அமைதி பொருமை ரொம்ப முக்கியம்.

சந்திராஷ்டமம்: விசாகம் 4 – 20 & 21.03.21, அனுஷம் – 22.03..21, கேட்டை = 23.03.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

குல தெய்வம், அங்காள பரமேஸ்வரி, காளி, பெண் தெய்வங்கள், இந்த கோயில்களில் விளக்கேற்றுங்கள், ஆஞ்சநேயர் / சனி வழிபாடும் மிகுந்த நன்மை தரும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள், தியானப்பயிற்சி அவசியம்.

தனூர்: (மூலம் 4பாதம், பூராடம் 4பாதம், உத்திராடம் 1ம்பாதம் முடிய) :

மாதம் முழுவதும் செவ்வாய், ராகு/கேது, சுக்ரன் நல்ல பலனையும் 01.04.21க்கு பின் புதனும் நன்மை செய்கின்றனர். குடும்பத்தில் சுபிக்ஷம் இருக்கும் தேவைகள் பூர்த்தியாகும் பணவரவு தாராளம், வியாதிகள் நீங்கும் எதிலும் ஒரு உற்ச்சாகம் இருக்கும், சமூகத்தில் ஒரு அந்தஸ்து இருக்கும். விட்டுக்கொடுத்து போகும் குணம் இருப்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை, பயணத்தல் நன்மை உண்டாகும், இதுவரை இருந்துவந்த எதிர்ப்பு, வழக்குகள் எல்லாம் சாதகம் ஆகும். குடும்ப உறவுகளின் வைத்திய செலவு குறைய ஆரம்பிக்கும். ராசி நாதன் குரு 3ல் நன்மை தரவில்லை எனினும் பார்வையால் வாழ்க்கை துணைவர் மூலம் பொருளாதார ஏற்றம், உத்தியோக உயர்வு என தருகிறார். குழந்தைகளால் நன்மை உண்டு. தாமதமான திருமணம், குழந்தை, உத்தியோகம் இவை கிடைக்க வாய்ப்பு அதிகம், வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டால் பின்னாளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்த தொழில் செய்வோர் கடன் வாங்குவதிலும் அரசின் உதவி அல்லது அரசு சம்பந்த பட்ட விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நலம் தரும். இவை பின்னாளில் தொந்தரவு தரும். சிலர் புதுவீடு வாங்கலாம், குடிபோகலாம் வேலை நிமித்தம் இடமாற்றம் இருக்கும். பெரிய கஷ்டங்கள் இல்லை எனினும் வைத்தியசெலவுகள் கூட வாய்ப்புள்ளது. சிக்கனம்  நன்மை தரும் பொதுவில் நன்மைகள் அதிகம் இருக்கும் மாதம்,

முக்கிய நிகழ்வு/கவனம் : பண பறிமாற்றம் இதில் அதிக கவனம் தேவை, நைச்சியமாக பேசுவதில் மயங்கி பணம் பறிபோக வாய்ப்புள்ளது. அதே போல் ஜீவன வகையில் சிரமம் மேலதிகாரியுடன் மோதல் போக்கு, உறவுகளுடன் மோதல் வாய்ப்புள்ளது இதனால் சில சங்கடங்கள் வரலாம் அமைதியும் யோசித்து செயல்படுதலும் நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: மூலம் – 24.03.21, பூராடம் – 25.03.21, உத்திராடம் 1 – 26.03.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

தக்ஷினாமூர்த்தி, சிவன், கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள், உழவாரப்பணி செய்தல், ஓம் நமசிவாய சொல்லுதல், சிவனுக்கு பாலபிஷேகம் செய்தல், தான தர்மங்களை செய்தல் இவை நன்மை தரும்.

மகரம் : (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4பாதம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய):

ராசிநாதன் ஆட்சி சுமாரான பலனை தருகிறார் கெடுதல் செய்யவில்லை ஆனால் சூரியன், குரு 2க்குடைய பலனை தருவார்,சுக்ரன், மற்றும் 11ல் கேது மாதம் முழுவதும் நல்ல பலனை அள்ளி தருகின்றனர், புதன் 31.03.21 வரை நற்பலனை தருகிறார். இதுவரை பணத்தட்டுப்பாடு சரிந்திருந்த பொருளாதாரம் நல்ல நிலையை அடையும், வளர்ச்சி அதிகம் இருக்கும், ஜீவன வகையில் அதிக லாபம் உண்டாகும் புதிய பூமி, வீடு வாகனம் வாங்கும் யோகமும், இல்லத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி  நோய் நீங்குதல், சுப நிகழ்வுகள் மூலம் புதிய உறவுகள் வருகை என்றும் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகம் ஆகும். நினைத்தவை நிறைவேறும். இதுவரை இருந்துவந்த செலவுகள் கட்டுக்குள்வரும். சிலருக்கு குழந்தை பேறு உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பதவி, சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம், வேலை தேடுவோர்க்கு அவர்கள் விரும்பிய நிறுவனத்தில் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைத்து மகிழ்ச்சி அதிகம் ஆகும். சொந்த தொழில், வியாபாரம் செய்வோர் அதிக லாபம் கடன் அடைதல், வங்கி உதவி அரசு உதவி கிடைத்து சரிந்திருந்த மார்க்கெட் உயர ஆரம்பிக்கும். பொதுவில் நன்மை அதிகம் எனினும் உடல் உஷ்ன பாதிப்பு, மறதி, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அலைச்சல், கால விரயம், வைத்திய செலவு என்றும் உறவுகளின் பிரிவு துன்பம் தரும் நிலையும் இருக்கும். ஆனால் வரும் மாதங்களில் பெரிய பாதிப்பை தராத அளவுக்கு சேமிப்பு இருக்கும்.

முக்கிய நிகழ்வு/கவனம் : பெரியதாக பாதிப்பில்லை இருந்தாலும் உடல் நலம், குடும்ப அங்கத்தினர் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுதல் வைத்திய செலவை குறைக்கும்.

சந்திராஷ்டமம்: உத்திராடம் 2,3,4 – 26.03.21, திருவோணம் – 27.03.21, அவிட்டம் 1,2 – 28.03.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

ராமர், ஆஞ்சநேயர், கோயிலில் விளக்கேற்றுதல், ராம நாமம் சொல்லுதல், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றுதல், முடிந்த தான தர்மங்களை செய்தல், இயலாத வயோதிகர்கள் ஏழைகளுக்கு ஒத்தாசை செய்தல் அன்ன தானம் நன்மை தரும்.

கும்பம் :(அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4பாதம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :

சுக்ரனும் கேதுவும் மாதம் முழுவதும் நல்ல பலனை தருகின்றனர். 01.04.21முதல் பலனை தருகிறார். குருபகவான் சில சங்கடங்களை கொடுத்தாலும் 5,9 பார்வையால் பலனை தருகிறார். இப்படி இருக்கிற நிலையில் மற்ற கிரஹங்கள் ராசிநாதன் சனி உட்பட அனுகூலமாக இல்லை. ஒருபக்கம் பொருளாதாரம் நன்றாக இருக்கும் பண வரவு தாராளம், ஆடை ஆபரண சேர்க்கை பெண்களால் நன்மை தெய்வ வழிபாடு, உத்தியோகத்தில் உயர்ந்த நிலை , தொழிலில் வளர்ச்சி சுப நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி இப்படி இருந்தாலும் கண் தலை,எலும்பு இவற்றில் பிரச்சனை உண்டாகி வைத்திய செலவையும் குடும்ப அங்கத்தினர்களுடைய உடல் பாதிப்பு, எதிர்பாராத விரயம் உத்தியோகத்தில் விரும்பாத இடமாற்றம், வேறு வீடு குடிபுகுதல், மன உளைச்சல் உறவினரால் மன அழுத்தம், ரத்த கொதிப்புள்ளவர்கள் பொருமையுடன் இருப்பதும் தகுந்த வைத்திய அறிவுரையை பின்பற்றுவதும் அவசியம், பிள்ளைகளால் சங்கடம், கல்வியில் தடை அல்லது மந்தம், கணவன் மனைவிக்குள் பிணக்கு, திடீர் பயணத்தால் களைப்பு, பெற்றோர் பெரியோர் போன்றோருடன் விரோதம், சபலத்தால் பொருள் நேரம் ஆகியவை விரயம், பொருள் களவு போகுதல், சொந்த தொழில் செய்வோர் ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளால் பிரச்சனை சந்திக்க நேரிடும். பெரும்பாலும் கெடுதல் அதிகம் இருக்கும் நன்மைகள் ஜனன ஜாதகத்தை ஒட்டி கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும் சுமார் மாதம்.

முக்கிய நிகழ்வு/கவனம் : பெற்றோர், பெரியோருடன் சண்டை, உறவுகளால் எதிர்பாராத வேண்டாத செலவுகள், உத்தியோகத்தில் அதிக மன அழுத்தம் உண்டாகும்படியான நிலை மேலதிகாரியுடன் விரோதம், பொருள் திருட்டு, பணம் கரைதல் போன்றவை இருக்கும் கவனம் தேவை

சந்திராஷ்டமம்: அவிட்டம் 3,4 – 28.03.21, சதயம் – 29.03.21, பூரட்டாதி 1,2,3 – 30.03.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

குலதெய்வ வழிபாடு முக்கியம், அது போக கால பைரவர் மற்றும் துர்க்கை வழிபாடும் நலம் தரும். கோயில்களில் விளக்கேற்றுதலும், கோயிலில் உழவாரப்பணிகளை செய்வதும், முடிந்த உபகாரங்களை அடுத்தவருக்கு செய்வதும், ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் நன்மை தரும்.

மீனம் :(பூரட்டாதி 4ம்பாதம், உத்திரட்டாதி 4பாதம், ரேவதி 4பாதம் முடிய) :

ராசிநாதன் குரு 12க்குண்டான பலனை அதாவது சுபம் கருதி செலவுகளை தருகிறார். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும், தெய்வ வழிபாடு மனம் அமைதியாகுதல்,நல்ல எண்ணம் தோன்றுதல் அடுத்தவருக்கு உதவுதல் என்று இருக்கும். சனி, சுக்ரன், செவ்வாய், ராகு அள்ளித்தருகிறார்கள் அதிர்ஷ்டத்தை என்று சொல்லலாம் எதிர்பாராத பொருளாதார முன்னேற்றம், பணவரவு, குடும்பத்தில் தாமதமான திருமணம், குழந்தை, உண்டாகுதல், எல்லோருடைய வியாதியும் குணமாகுதல் கணவன் மனைவி நெருக்கம், பெற்றோர் பிள்ளைகளுடன் அனுகூல நிலை அக்கம்பக்கத்தாருடன் சுமூக உறவு சமூக அந்தஸ்து, புது வீடு, வாகனம் வாங்குதல், சேமிப்பு அதிகரித்தல், நினைத்த செயல்கள் நிறைவேறுதல், உத்தியோகத்தில் திடீர்பதவி, சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம், புதிய வேலை கிடைத்தல், சொந்த தொழில் வியாபாரம் செய்வோர் வளர்ச்சி அடைதல், லாபம், அரசு வங்கி உதவிகள், தொழிலை விஸ்தரித்தல், சிலர் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகுதல் செயல்படுதல், கல்வியில் வளர்ச்சி, எல்லோருடனும் நல்லபெயர் சுமூக உறவு, நண்பர்களால் நன்மை என்று பெரும்பாலும் நன்மை அதிகம், அதே நேரம் உடலில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, பலவித தொல்லைகளால் ரத்த அழுத்தம் கூடுதல், குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனை உண்டாகுதல், மன குழப்பம், சிந்திக்கும் திறன் குறைவு இப்படி சில சங்கடங்களும் இருக்கும். கவலை வேண்டாம் மனோ தைரியம் அதிகம் இருப்பதால் இதை சமாளித்துவிடுவீர்கள். நல்ல மாதம் இது.

முக்கிய நிகழ்வு/கவனம் : உத்திரவாதம் கொடுப்பதை அல்லது பிறர் சொல்வதை யோசிக்காமல் முடிவெடுத்தல் இவை நடக்கும் இதனால் சில சங்கடம் விளையும் கவனமாக இருப்பதும். பெரியோர்கள் பெற்றோர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதும், பொறுமை கொண்டு செயல்படுவதும் நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி 4 – 30.03.21, உத்திரட்டாதி – 31.03.21, ரேவதி – 01.04.21

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

பெருமாள் தாயார், சயனித்த கோலத்தில் இருக்கும் அரங்கநாதரை சேவிப்பது நன்மை தரும். அருகில் உள்ள கோயிலில் தாயாருக்கு விளக்கேற்றுங்கள், தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிங்கள், அன்னதானம், ஏழை எளியோருக்கு தேவையை பூர்த்தி செய்தல், மாற்று திறனாளிகளுக்கு உதவுதல் நன்மை தரும்.

!!சுபம்!!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.