அழியாத மனக்கோலங்கள் – 11

This entry is part 11 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

பொதுப்பணித் துறை அலுவலகத்தில் எங்கள் ஆறு பேரையும் இன்னொரு அறைக்குக் கூட்டிச் சென்று விட்டு விட்டு அந்த அறிவிப்பாளர் போய் விட்டார். எங்கள் அறுவரில் ஒரு பெண் பிள்ளை கூட இல்லாதது இன்னொரு ஆச்சரியம். நாங்கள் ஒருவருக்கொருவர் யார், எங்கிருந்து வருகிறோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த பொழுது என் அனுபவத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த சமயத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க தோற்றமளித்த ஒருவர் சில காகிதங்களுடன் உள்ளே நுழைந்தார்.

அவரைப் பார்த்ததும் எங்கள் கலகலப்பு நின்றது. சட்டென்று எழுந்தவர்களை அன்பாக உட்காரச் சொன்னார். தன்னை பாலசுப்பிரமணியன், செக்ஷன் ஆபிஸர் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். தன் கையில் கொண்டு வந்திருந்த காகிதத்தைப் பார்த்து எங்கள் ஆறு பேர் பெயரையும் படித்தார். பெயர்களைப் படித்த வரிசையில் எங்களை அமரச் சொன்னார். முதலாவதாக கஜேந்திரன், அடுத்தது கமலேஷ், அடுத்தது நான் என்று அமர்ந்த பொழுது இந்த வரிசை தான் செலக்ஷன் லிஸ்ட் என்றார். ஆக நான் மூன்றாவது நபராய் வரிசையில் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.

அடுத்து எத்தனை பேருக்கு வேலை, எங்கு வேலை, என்ன வேலை, எப்பொழுது வேலையில் ஜாயின் பண்ண வேண்டும் என்பதைச் சொன்னார். ஒருவருக்குத் தான் வேலையாம். பணியிடம் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள கிருஷ்ணகிரி ரிஸர்வாயர் ப்ரோஜக்ட் உதவிப் பொறியாளர் அலுவலகம், டைபிஸ்ட் வேலை, இப்போதைக்கு இரண்டு மாதத்திற்கு தற்காலிக வேலை என்ற தகவல்களைச் சொன்னார்.

அவர் சொல்லி முடித்தவுடனேயே கஜேந்திரன் தனக்கு வெளியூர் வேலைக்கு போக முடியாத குடும்பச் சூழ்நிலை என்று சொன்னான். கமலேஷ் என்ன சொன்னான் என்று ஞாபகமில்லை. மொத்தத்தில் அவனும் இல்லை என்று ஆன பிறகு பந்து என் கோர்ட்டுக்கு வந்தது. நான் போகத் தயார் என்றதும் அந்த செக்ஷன் ஆபிஸர் என் அருகில் வந்து கைகுலுக்கினார். மற்றவர்களைப் பார்த்து ‘பெஸ்ட் லக் நெக்ஸ்ட் டைம்’ என்று சொன்னார். மற்றவர்கள் வெளியேற நான் மட்டும் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்பதற்குக் காத்திருந்தேன். என்னை அந்த அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டு அவர் மட்டும் வெளியேறினார்.

கொஞ்ச நேரத்தில் என்னைக் கூப்பிடுவதாக ஒருவர் வந்து அழைத்துப் போய் இன்னொரு அறைக்குள் போகச் சொன்னார். அந்த அறை தான் தலைமை அதிகாரி அறை போலிருக்கு. அங்கு பாலசுப்ரமணியம் நிற்க அதிகாரி அவரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் சொன்னேன். அந்த அதிகாரி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். “இந்த அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை கிருஷ்னகிரி ரிஸர்வாயர் ப்ரொஜக்ட் ஏ.இ. கிட்டே கொடுத்திடுங்க.. திங்கட்கிழமை பத்து மணிக்குள் வேலையில் சேர்ந்திடணும்..” என்று என்னிடம் வேலை நியமன ஆணை தட்டச்சு செய்திருந்த காகிதத்தைக் கொடுத்தார்.

“நன்றி, சார்..” என்று வாங்கிக் கொண்டேன். ‘நீங்கள் போகலாம்..’ என்கிற மாதிரி பாலசுப்ரமணியன் ஜாடை காட்ட வெளியே வந்தேன்.

நேரே ஜாப் டைப்பிங் ஆபிஸ் வந்து அய்யங்காரிடம் வேலை கிடைத்த விஷயத்தைச் சொன்னேன்.. அவருக்கும் சந்தோஷம்.. “தெரியுமோல்யோ?” என்றார் அய்யங்கார். “கிருஷ்ணகிரி ரிஸர்வாயர் ப்ரொஜெக்ட் என்றால் கிருஷ்ணகிரிக்கு முன்னாலேயே இருக்கு. ஆக்சுவலி கிருஷ்ணகிரி டாம் இருக்கற இடம். பஸ்லே தான் போகணும். கண்டக்டர் கிட்டே சொல்லி மெயின் ரோடிலேயே இறங்கிக்கோ.. அங்கிருந்து உள்ளே போக லோக்கல் பஸ் வரும். இல்லேனா உள்ளே போகிற வேன் ஏதாச்சும் வந்தாலும் ஏறிக்கோ… ஏ.இ. ஆபிஸ்ன்னு சொன்னேனா, வாசல்லேயே விட்டுடுவாங்க..” என்றார்.

இதெல்லாம் பற்றித் தெரியாமலேயே இருந்திருக்கிறேன். அந்த ஆபிஸ்லேயே விசாரித்திருக்கலாம். அதுவும் செய்யாமலேயே இருந்திருக்கிறேன். நல்லவேளை, அய்யங்கார் சொன்னார் என்றிருந்தது. இப்படி வாழ்க்கை பூரா எத்தனையோ விஷயங்கள். ஒவ்வொண்ணும் பாடமாத் தான் இருந்திருக்கு என்று இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன்.

“சுகவனத்துக்கு சொல்லி அனுப்பிச்சிடறேன். நீ போய்ட்டு வா. அந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு எப்போ வேணா நீ இங்கே வரலாம். யதா செளகர்யம்..” என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்தார். சுகவனம் அவருக்குத் தெரிந்தவர். கால் டியூட்டி டைப்பிஸ்ட் மாதிரி. அய்யங்காருக்கும் வேண்டப்பட்டவர். அதனால் அவர் வந்து அய்யங்காருக்கு உதவியாய் இருப்பதில் எந்த சங்கடமும் இருக்காது என்று நினைத்துக் கொண்டேன்.

அந்தக் கடை அறையின் மூலையிலேயே ஒரு இரண்டடி உயரத்திற்கு டெஸ்க் மாதிரி மரப்பெட்டி அய்யங்கார் உபயோகத்தில் இருந்தது. பக்கத்திலேயே உட்கார்ந்து பெட்டியைத் திறப்பதற்கு வாகாக ஒரு சின்ன ஸ்டூல் போட்டிருக்கும். அந்த ஸ்டூலில் போய் உட்கார்ந்து கொண்டு பூணுலில் கோத்திருந்த சாவியால் பெட்டியைத் திறந்தார். நான் ரோடைப் பார்க்கிற மாதிரி திரும்பிக் கொண்டேன்.

“இந்தா..” என்றார் அய்யங்கார். “ஐம்பது ரூபாய் இருக்கு.. இதை வைச்சுக்கோ..” என்றார். ‘இந்த மாசம் பத்து நாள் போலத் தான் வேலை செஞ்சிருப்பேன். மாசச் சம்பளத்தையே கொடுத்திருக்கிறாரே’ என்று நினைத்துக் கொண்டேன்.

அய்யங்கார் முதல்லேயே சொல்லி வைத்திருப்பார் போலிருக்கு. சுகவனமும் வந்தார். என்னைப் பார்த்ததும், “என்னடா.. போன விஷயம் என்னாச்சு?.. வேலை கிடைச்சிடுத்தில்லையோ?” என்றார்.

“ஆமாம்..” என்று புன்னகைத்தேன்.

” நீ சூரப்புலிடா..” என்று என்னைத் தட்டிக் கொடுத்தார்.. “அய்யங்கார் சார்.. வேலை கிடைச்சதும் பையன் முகத்திலே என்ன களை பாருங்க..”

“இப்போத் தான் முதல் தடவையா கவர்ன்மெண்ட் ஆபிஸ் வேலைக்குப் போறான். நீ ரொம்ப அவனை சதாய்க்காதேடா..” என்றார் அய்யங்கார்.

“நான் வரேன், மாமா..” என்று அய்யங்காரிடம் சொல்லிக் கொண்டு, சுகவனத்தைப் பார்த்து கையாட்டி விட்டு கடைப் படிகளில் இறங்கி ரோடுக்கு வந்தேன்.

வீட்டுக்குப் போனதும் எல்லோருக்கும் சந்தோஷம். இரண்டு நாள் தான் இருக்கு. இரண்டு மாச உபயோகத்திற்கு எல்லாத்தையும் எடுத்து வைச்சிக்கணும். எங்கே தங்குவேன், என்ன செய்வேன் என்று எதுவும் தெரியவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் வாக்கிலேயே அங்கேப் போய்ச் சேருவது நல்லது போலிருந்தது. அப்போத் தான் பத்து மணிக்குள்ளே வேலையில் சேர முடியும் என்ற நினைப்பு மேலோங்கியது.

கிடைத்திருந்த வேலை பற்றி இந்த இடத்திலாவது சொல்ல வேண்டும். அரசு வேலைகள் குறித்த ஆணையில் 10 (A) (1) என்று குறிக்கும் பகுதி ஒன்று உண்டு. இப்பொழுது அமுலில் இருக்கிறதா, தெரியவில்லை. அரசு அலுவலகங்களில் நிரந்தர வேலை பார்ப்பவர்கள் நீண்ட விடுப்பு எடுத்திருந்தால் அவர்கள் பணியைச் செய்ய தற்காலிகமாக அலுவலர் வேண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவார்கள். வேலை வாய்ப்பு அலுவலகமோ தங்களிடம் பதிந்திருப்பவர்களின் பணித் தேவைக்கான தகுதி பார்த்து அந்தந்த அலுவலகங்களுக்கு அனுப்புவார்கள். அவர்களை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்திக் கொள்வது அந்தந்த அலுவலகத்தின் வேலை. வேலை வாய்ப்பு அலுவலகத்தால் அனுப்பப் பட்ட நபரை உபயோகப்படுத்திக் கொண்ட, அவர்களைப் பணி அமர்த்தல், நீக்கல்
சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களின் ஆணைகளில் ஒரு நகல் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும். அதனால் இதெல்லாம் பற்றி வேலை வாய்ப்பகம் தகவல்களை சீறாக நடைமுறைப்படுத்தி வந்ததினால் எல்லாம் முறைப்படி நடந்தன.

அரசாங்க விஷயங்களில் எந்தவிதமாக அரசியல் தலையீடுகளும் இல்லாத பொற்காலம் அது.

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 10அழியாத மனக்கோலங்கள் – 12 >>

About Author