அழியாத மனக்கோலங்கள் – 12

This entry is part 12 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

பஸ் கண்டக்டரிடம் முன் கூட்டியே சொல்லி வைத்திருந்து கிருஷ்ணகிரி அணைக்குப் போகும் குறுக்குப் பாதை அருகில் மெயின் ரோடிலேயே இறங்கிக் கொண்டேன். கையில் அந்தக் கால டிரங்க் பெட்டி.

சிறிது நேரத்தில் கிருஷ்ணகிரி பக்கமிருந்து ஒரு டவுன் பஸ் வந்து குறுக்குப் பாதையில் நின்றது. கிருஷ்ணகிரி டேம் (DAM) என்று எழுதியிருந்ததை கவனித்து ஏறிக் கொண்டேன். வெளியே பார்த்துக் கொண்டே வந்தேன். பத்து நிமிஷப் பயணத்தில் துணைப் பொறியாளர் அலுவலக வாசலிலேயே பஸ் நிற்பதைக் கவனித்து திடீரென்று மனத்தில் கிளைத்த ஒரு குட்டி சந்தோஷத்துடன் இறங்கிக் கொண்டேன்.

அப்பொழுது மாலை சுமார் ஆறு மணி இருக்கும். இருட்டு கவிவதற்கு அப்பொழுதே முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் உள் பக்கமிருந்து ஒருவர் வேகமாக என்னை நோக்கி வந்தார். “யார் சார் வேணும்?”

விஷயத்தைச் சொன்னேன். “அப்படியா?” என்றவர் “நான் தான் இங்கே ஆபீஸ் ப்யூன், தோட்டக்காரன் எல்லாம்..” என்றார். “சாப்பிட்டாச்சா, சார்?”

‘இல்லை.. இனிமேல் தான்..”

“அப்போ சீக்கிரம் வாருங்கள். கேண்டீன் மூடி விடுவார்கள்..” என்று என்னை துரிதப்படுத்தி என்னிடமிருந்து டிரங்க் பெட்டியை வாங்கிக் கொண்டார்.

அலுவலத்திற்குள் நுழைந்து முன் பக்கமிருந்த ஒரு அறையில் என் பெட்டியை வைத்து விட்டு அறையை தன்னிடமிருந்த சாவிக்கொத்தை எடுத்து பூட்டினார். “வாங்க, போலாம்..”

‘நல்லவேளை.. எங்கேயும் அலைய வேண்டாம். இங்கேயே காண்டீன் இருப்பது செளகரியம் தான்’ என்று நினைத்துக் கொண்டே அவருடன் பேச்சுக் கொடுத்தபடியே போனேன்.

கொஞ்ச தூரம் நடந்து திரும்பியதும் காம்பவுண்டுக்குள்ளேயே ஒதுக்குப் புறமாக ஓரிடத்தில் இருந்தது காண்டீன். அதை ஒட்டி சின்னதாக ஒரு குடிசை வேறே.

நாங்கள் போனதும், “சார் தான் நம்ப ஆபிசுக்குப் புதுசா வந்திருக்கிறவர்” என்று அங்கு வாட்ட சாட்டமாக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் சின்னசாமி — ப்யூன் பெயர்– அறிமுகப்படுத்தினார்.

“வணக்கம், சார்..” என்றார் அவர். நானும் வணக்கம் சொன்னேன்.

“இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தீர்கள் என்றால் ஒன்றும் இருக்காது.. அஞ்சு மணிக்கெல்லாம் ஆபீஸ் மூடிறாங்க, இல்லையா?” என்றார் அவர். “என்ன சாப்பிடுறீங்க..?” என்ன இருக்கு என்று கேட்டு தோசை மட்டும் போடச் சொல்லி சாப்பிட்டேன். தொட்டுக்க அவர் போட்ட வெங்காய சட்னி காரமாக இருந்ததால் ஒதுக்கி வைத்து விட்டேன். சின்னசாமி தனக்கு ஒன்றும் வேண்டாம் என்றார். வற்புறுத்தியதில் ஒரு டீ மட்டும் குடித்தார்.

“எங்கே தங்கப் போறீங்க?.. பேச்சுலரா?.. அப்படின்னா ஆபிஸ்லேயே தங்கிக்கலாமே?.. எதுக்குச் சொல்றேன்னா, இங்கேயே எல்லாம் இருக்கு.. கிருஷ்ணகிரி போய் வருவது தேவையில்லை. அங்கே ரூம் எடுத்தீங்கன்னா அது வேறே செலவு..” என்று எல்லாம் சொல்லி விட்டு, “பாத்து செய்யுங்க..” என்றார் கேண்டீன் உரிமையாளர் ஜவஹர்லால்.. நல்ல பெயரில்லை?.. அவர் அப்பா காங்கிரஸ் காரராம். அதனால் அப்படி பெயர் வைத்தாராம். “எனக்கு ஒரு மகன் மட்டுமே..” என்று சொசுறு தகவலையும் சொன்னார்.

“உங்க பையனுக்கு நீங்க என்ன பேர் வைச்சிருக்கீங்க?..” என்று ஒரு எதிர்ப்பார்ப்போடு கேட்டேன். அந்தக் கால வழக்கப்படி நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஏதாவது இருக்கும் என்ற எண்ணமும் மனசுக்குள் ஓடியது.

“என் பையனுக்கங்களா?..” என்று கேட்டவர், “லால்பகதூர்ன்னு பேர் வைச்சிருக்கேன்…” என்று இலேசாக புன்முறுவலித்துச் சொன்னார்.

மொத்தத்தில் அவர் ஒரு வித்தியாசமான நபராகத் தென்பட்டார். போகும் போது “இங்கே தானே ஆபிஸ்லே தங்கப் போறீங்க.. காலைலே எட்டு மணிக்கெல்லாம் இட்லி கிடைக்கும்” என்றார்.

“அப்படியா?.. வந்திடறேன்..” என்று கிளம்பினேன்.

என் டிரங்க் பெட்டியை வைத்து பூட்டிய அறைக்கு சின்னசாமி என்னைக் கூட்டிக் கொண்டு போனார். அறைக்கதவை திறந்தார். உள்ளே போய்ப் பார்த்ததில் அறை கொஞ்சம் விசாலமாகத் தான் தெரிந்தது. “இந்த அறையை என் உபயோகத்துக்காகத் தான் கொடுத்திருக்காங்க.. நீங்க இங்கேயே தங்கிக்கலாம்..” என்றார். அவர் குடும்பம் கிருஷ்ணகிரியில் இருப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தார்.

“அப்போ உங்களுக்கு?”

நான் நைட் டூட்டி தானே? வெளிப்பக்கம் தான் இருப்பேன். ஆபீஸ் சம்பந்தப்பட்டவங்க அகால நேரத்லே வந்தாங்கன்னாலும் இந்த அறையைக் கொடுக்கறது வழக்கம். பெரிய ஆபிஸர்ல்லாம் தங்கறத்துக்கு சூட் இருக்கு. வேறே தொந்தரவு ஏதும் இல்லே. அதுனாலே நீங்க இங்க இருக்கப் போற ரெண்டு மாசமும் இங்கேயே தங்கிக்கலாம். அந்த மூலைலே பாத்ரூம்லாம் கூட இருக்கு..” என்றார்..அவர் சொன்னது எனக்கும் பிடித்திருந்தது. “சரி..” என்றேன்.

வெளியே வந்தோம். அலுவலகத்தைச் சுற்றி பிர்மாண்டமான தோட்டம். சாயந்தரம் வரும் பொழுதே பார்த்துக் கொண்டேன். நிறைய செடி கொடிகள். குரோட்டன்ஸ் பூத்துக் குலுங்கியது. “பிரமாதமாய் மெயிண்டைன் பண்ணுகிறீர்கள், சின்னசாமி..” என்றேன்.

“பெரிய ஆபிஸரும் இதைத் தான் சொல்வார், சார்..” என்று சின்னசாமி முறுவலித்தார்.

அவரைப் பற்றிச் சொன்னார். அவர் குடும்பம், குழந்தைகள் பற்றிச் சொன்னார். இரண்டும் ஆண் பிள்ளைகள். பெரியவன் ஆறாவது, சின்னவன் நாலாம் வகுப்பு. இரண்டு மணி நேரப் பழக்கத்தில் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றார்.

“அப்படியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஆமாம், சார்.. எங்களமாதிரி சப் ஸ்டாப் கிட்டே இப்படி அன்பா யாரும் பழக மாட்டாங்க, சார்..”

“சின்னசாமி! நான் இன்னும் வேலைலேயே ஜாயின் பண்ணலே.. அதுவும் வெறும் டெம்பரவரி ஆசாமி…”

“இருக்கட்டுமே, சார்! எப்படியாயிருந்தா என்ன? மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் முக்கியமில்லே, சார்..”

சின்னசாமி எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கிருந்தது. “இப்போத் தான் வந்திருக்கேன்.. அதுக்குள்ளே சொன்னா எப்படி?” என்று கொக்கி போட்டேன்.

“அதெல்லாம் பாத்தாலே தெரியும் சார்..” என்று ஒரே வரியில் சின்னசாமி முடித்துக் கொண்டார்.

இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை வருஷங்களுக்கு முன்னால் முழுசாக நான் உருவாவதற்கு முன்னேயே எனக்கே தெரியாத எதிர்கால என்னை சின்னசாமி மனசில் படம் பிடித்துப் பார்த்து விட்டார் என்று வியப்பாகத் தான் இருக்கிறது.

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 11அழியாத மனக்கோலங்கள் – 13 >>

About Author