ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 2

This entry is part 2 of 44 in the series ஶ்ராத்தம்

முந்தைய பாகத்தை படிக்க

முக்கிய விஷயத்துக்குள் போகும் முன் ஒரு சின்ன விஷயம். ஶ்ராத்தம் என்று எழுதுவதே சரி. சிலர் இந்த ஶ வை பார்க்க முடிவதில்லை என்று சொல்கிறார்கள். அதனால் உலக நடைமுறையை ஒட்டி சிராத்தம் என்று எழுதுகிறேன். இன்னொரு முக்கிய விஷயம் இது சிரார்த்தம் இல்லை. கூடுதல் ர் வராது. ஆனால் பலரும் இப்படி தப்பாக உச்சரிப்பதை பார்க்கலாம். அதனால் சொன்னேன்.

சரி, முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நாம் இந்த சிராத்தத்தை செய்வது ஔபாசன அக்னியில். திருமணமான அனைத்து அந்தணர்களும் ஔபாசனம் என்னும் அக்னி காரியத்தை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்யாதவர்களே பலர். இந்த காலத்தில் ஔபாசனம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது ஆகவே செய்யாதவர்களுக்காக முதலில் ஔபாசன அக்னியை உண்டாக்கி விட்டு, விட்டுபோன காலத்துக்கான ப்ராயச்சித்தங்களையும் செய்த பிறகு இந்த ஔபாசனமானது ஆரம்பிக்கிறது. காலை ஔபாசனம் செய்யப்பட்டு ஶ்ராத்தம் அதன் பின் துவங்குகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த வித்தியாசத்தை உணரவில்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ‘விச்சின்ன ஔபாசன அக்னி சந்தானம்’ என்னும் இந்த ஔபாசன அக்னியை மீண்டும் உற்பத்தி செய்வது கொள்ளும் காரியம் ஶ்ராத்தத்தின் ஒரு அங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வேளை நாம் ஔபாசன அக்னியை பராமரித்து ஔபாசனம் செய்பவராக இருந்தால் அதிலேயே ஶ்ராத்தத்தை செய்ய வேண்டும். அதிலேயே ஶ்ராத்த அன்ன ஹோமத்துக்கான ஹவிஸை தயாரித்துக்கொள்ள வேண்டும். ஒரு சின்ன டம்ளர் அரிசியை களைந்து அதற்கேற்றபடி நீரை ஒரு சிறு குண்டானில் கொதிக்க வைத்து அரிசி இட்ட பதினைந்து இருபது நிமிடங்களில் ஹவிஸ் தயாராகிவிடும். இதுதான் சிரத்தை உள்ளவர்கள் செய்ய வேண்டியது. சிலபேர் ‘சிரத்தை இருக்கிறது: ஆனால் என்னால் தினசரி ஔபாசனம் எல்லாம் செய்ய முடியவில்லையே’ என்றால் சிராத்த பக்ஷத்தின் ஆரம்பத்தில் ஔபாசன அக்னியை தோற்றுவித்து விட்டு சிராத்த நாள் வரைக்கும் தினசரி காலை சாயம் ஔபாசனம் செய்து விட்டு அதில் இந்த ஹவிஸை தயார் செய்து கொள்ளலாம். இது நல்லது. குறைந்தது மூன்று நாட்களாவது இதை செய்து கொண்டிருந்தால் இந்த ஔபாசன அக்னி பலம் வாய்ந்தது என்று சொல்லும் தன்மையை கொண்டிருக்கும். இதை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

ப்ரம்ஹ யக்ஞம்

அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்ததும் ப்ரம்ஹ யக்ஞம் செய்து வைப்பார்கள். அதே போல இங்கேயும் ஶ்ராத்தம் முடிந்த பிறகு ப்ரம்ஹ யக்ஞம் செய்து வைப்பார்கள். இந்த பிரம்ம யக்ஞம் செய்வது என்பது ஒரு நித்திய கர்மா. அதாவது தினசரி செய்ய வேண்டிய விஷயம். மத்த நாளெல்லாம்தான் செய்யவில்லை, இன்றாவது செய்யட்டுமே என்ற ரீதியில்தான் அவரது வீட்டுக்கு வரும் வாத்தியார்கள் அதை செய்து வைத்துவிட்டு கொடுக்கிறார்கள். மற்றபடி நமக்கு தெரியாது செய்ய முடியாது என்ற நிலை இல்லாமல் சொல்லி செய்து வைப்பதற்கு யாரோ இருக்கிறார்கள், அதனால் பலன் உள்ளது. ஆகவே இந்த கர்மாவை தினசரி செய்ய வேண்டியது. ஶ்ராத்தம் அன்றைக்கும் செய்கிறோம் என்று தெரிந்து கொள்வோம்.

தொடரும்

Series Navigation<< ஶ்ராத்தம் – 1ஶ்ராத்தம் – 3 >>

About Author